/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாயில்லா ஜீவன்களுக்கு தினமும் உணவு
/
வாயில்லா ஜீவன்களுக்கு தினமும் உணவு
ADDED : ஏப் 14, 2025 05:33 AM

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் பல்லால் பாக்கில் வசித்து வருபவர் தாமோதர் ஷெட்டி; ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி ரஜினி ஷெட்டி. மும்பையை சேர்ந்த ரஜினி ஷெட்டி, சிறு வயது முதலே தெரு நாய்கள் மீது அன்பு செலுத்தி வந்தார். திருமணமாகி, மங்களூரு வந்த பின்னரும் தொடர்கிறார்.
ஆரம்பத்தில் இவரின் செயலுக்கு அக்கம் பக்கத்தினர் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவரின் செயலுக்கு கணவர் தாமோதர் ஷெட்டியும், மூன்று பிள்ளைகளும் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனை
இவர் நாய்கள், பூனைகளுக்கு உணவு மட்டும் அளிப்பதில்லை, அவை சாலையில் அடிபட்டாலோ, கிணற்றில் விழுந்த தகவல் அறிந்தாலோ, அவற்றை மீட்டு, மருத்துவமனைக்கு எடுத்து சென்று உயிரையும் காப்பாற்றி உள்ளார்.
தினமும், நகரின் துறைமுகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், லால்பாக், மன்னகுட்டே, சிலிம்பி உட்பட பல இடங்களில் உள்ள தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார். இந்த நாய்களை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று, தடுப்பூசியும் போட்டு அழைத்து வந்துள்ளார்.
இவரது சேவையை பாராட்டி, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தாமாக முன்வந்து நாய்களுக்கு உணவு அளிப்பதற்கான தொகையை வழங்குகின்றன. மேலும், சில விலங்குகள் ஆர்வலர்கள் தங்களின் பிறந்த நாள், முக்கிய நாட்களில் நன்கொடை அளிக்கின்றனர். இந்த பணத்தில் நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார்.
உரிய இடம்
இவருக்காகவே காத்திருக்கும் நாய்கள், இவரை பார்த்தவுடன், தனது வாலை ஆட்டியபடி அவரின் கால்களை சுற்றி வந்து கொஞ்சும். அவரும் நாய்களை கொஞ்சிய பின், அவைகள் இருக்கும் இடத்தில் உணவை வழங்குவார்.
இது குறித்து ரஜினி ஷெட்டி கூறியதாவது:
நாய்கள் வாய் பேச முடியாதவை. மனிதர்கள் தான் உதவ வேண்டும். திருமணத்துக்கு முன், நாய்களுக்கு பிஸ்கெட் வழங்கினேன். திருமணமான பின், உணவு அளித்து வருகிறேன். சில சமயங்களில், அவைகள் இருக்கும் இடத்துக்கு சென்று உணவளித்து வருகிறேன். தினமும் 60 கிலோ அரிசி சமைக்கிறேன். இறைச்சி கடைகளில் பயன்படுத்தாத இறைச்சியை வாங்கி வந்து, மஞ்சள் துாள், உப்பு கலந்து உணவுடன் வழங்குகிறேன்.
கொரோனாவுக்கு முன், 200 நாய்களுக்கு உணவு அளித்து வந்தேன். இப்போது, 700 நாய்களுக்கு உணவு அளிக்கிறேன். என்னால் முடிந்த வரை உணவளிப்பேன். விபத்துகளில் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு சிகிச்சை அளித்து, என் வீட்டில் வளர்த்து வருகிறேன். அவைகள் குணமடைந்த பின், வெளியே செல்ல அனுமதிப்பதில்லை.
இது தவிர, கிணறுகளில் விழுந்த 161 நாய்கள் மற்றும் பூனைகளையும் மீட்டுள்ளேன். நாய்களுக்கு உணவளிக்க தினமும் 5,000 ரூபாய் செலவழிக்கிறேன். என் செயலை பாராட்டி, பொது மக்கள் தாமாக முன்வந்து நன்கொடை அளிக்கின்றனர். பணம் குறைவாக இருந்தால், நானே என் சொந்த பணத்தை செலவழிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

