ADDED : ஏப் 29, 2026 01:11 AM
பெங்களூரு: 'பள்ளி விழாக்களில் ஆபாச பாடல், ஆபாச நடனம் ஆடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
இத தொடர்பாக, பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
பள்ளிகளில் நடத்தப்படும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில், ஆபாச பாடல், ஆபாச நடனம் நடத்தப்படுவது அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இது போன்ற செயல்பாடுகள், மாணவர்களின் மனதில் தவறான எண்ணத்தை விதைக்கின்றன.
பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்று கொடுக்கப்படுகிறது. அப்படி இருக்கையில், ஆபாச பாடல், ஆபாச நடனம் என்பவை, மாணவர்களுக்கு தவறான முன்னுதாரணமாக மாறக்கூடும்.
இது போன்ற பாடல்களுக்கு மாணவர்களை நடனமாட அனுமதிப்பது, அவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆபாச பாடல், ஆபாச நடனம் ஆடுவதற்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
பள்ளிகளின் தலைமை ஆசிரியர், அவரவர் பள்ளிகளில் உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதை மீறும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நம் நாட்டின் கலாசாரம், பண்பாடு போன்றவற்றை ஊக்கப்படுத்தும் வகையிலான பாடல், நடனங்கள் மாணவர்கள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும். இதுவே, அவர்களின் வாழ்க்கைக்கு சரியானதாக இருக்கும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
