ADDED : ஆக 13, 2026 11:25 PM

பெங்களூரு: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ர கவுடா உட்பட 17 பேர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர்.
இவர்களில் ஒருவரான பிரதோஷ் அப்ரூவராக மாற முடிவு செய்தார். இதற்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் அவர் 11 பக்கங்கள் கொண்ட மனு அளித்தார்.
மனுவில், ரேணுகாசாமியை தர்ஷன் எப்படியெல்லாம் கொடுமை செய்து கொலை செய்தார் என குறிப்பிடப்பட்டிருந்தது. பிரதோஷ் அப்ரூவராக மாறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ஷன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு, நேற்று நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 'இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரதோஷ் அப்ரூவராக மாறுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தர்ஷன் தரப்புக்கு உரிமையில்லை. ஒரு குற்றவாளி அப்ரூவராக மாறுவதற்கு சக குற்றவாளிகளின் ஆட்சேபனைகளை கேட்க அனுமதித்தால், நம் நாட்டில் ஒரு குற்றவாளி கூட அப்ரூவராக மாற முடியாது' என, நாகபிரசன்னா தீர்ப்பு வழங்கினார்.
மேலும், தர்ஷன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார். இது, ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷனுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
