'முன்னாள் டி.ஜி.பி., கொலையில் மகள் கிருதியிடம் விசாரிக்கலாம்'
'முன்னாள் டி.ஜி.பி., கொலையில் மகள் கிருதியிடம் விசாரிக்கலாம்'
ADDED : ஏப் 25, 2025 05:37 AM

பெங்களூரு: 'முன்னாள் டி.ஜி.பி., ஓம்பிரகாஷ் கொலை வழக்கில், அவரது மகள் கிருதி விசாரணைக்கு உட்படுத்த தகுதியானவர்' என்று, நிமான்ஸ் மருத்துவமனை போலீசாருக்கு அறிக்கை கொடுத்து உள்ளது.
கர்நாடக போலீஸ் முன்னாள் டி.ஜி.பி., ஓம்பிரகாஷ், 68. பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் குடும்பத்துடன் வசித்தார்.
குடும்ப, சொத்து தகராறில் கடந்த 20 ம் தேதி ஓம்பிரகாஷை அவரது மனைவி பல்லவி, 64, கத்தி யால் குத்தி படுகொலை செய்தார். அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த கொலையில் ஓம்பிரகாஷ் மகள் கிருதிக்கும் தொடர்பு இருப்பதாக, போலீசில் புகார் செய்யப்பட்டது. அவரிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால், அவருக்கு மனநல பிரச்னைகள் இருப்பதாக கூறப்பட்டது.
இதனால் விசாரணை வளையத்தில் இருந்து போலீசார் அவரை விடுவித்தனர். அவரை நிமான்ஸ் மருத்துவமனைக்கு, மருத்துவபரிசோதனைக்கு அனுப்பினர். இந்நிலையில், நிமான்ஸ் மருத்துவமனை நிர்வாகம், போலீசாருக்கு தாக்கல் செய்த அறிக்கையில் கிருதி விசாரணைக்கு உட்படுத்த தகுதியானவர் என்று கூறப்பட்டு உள்ளது. இதனால் கிருதியிடம் மீண்டும் விசாரிக்க, போலீசார் தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையில், ஓம்பிரகாஷ் கொலை வழக்கை சி.சி.பி., விசாரணைக்கு உள்துறை ஒப்படைத்து இருந்தது.
விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சி.சி.பி., உதவி போலீஸ் கமிஷனர் தர்மேந்திரா நேற்று முன்தினத்தில் இருந்து விசாரணையை துவக்கினர். அவரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை, ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட் போலீசார் ஒப்படைத்தனர்.
