ADDED : ஆக 25, 2026 01:08 AM

பிரம்மாவர்: தந்தை திட்டினார் என்ற கோபத்தில், அவரையும், தாயையும் சுத்தியலால் அடித்து கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.
உடுப்பி மாவட்டம், பிரம்மாவர் தாலுகாவின் காந்திநகரின் பைகாடி கிராமத்தில் வசித்தவர் மெஹபூப் அலி, 55. இவரது மனைவி ஷம்ஷாத் பேகம், 50. தம்பதியின் மகன் ஷாஹீத் அலி, 31. தந்தை டிராக்டர் ஓட்டுநராகவும், மகன் உணவு 'டெலிவரி பாயாக' பணியாற்றி வருகிறார்.
ஷாஹீத் அலி சிறு, சிறு விஷயத்துக்கும் பெற்றோருடன் சண்டை போடுவார். சில நேரங்களில், அவரது தந்தை அவரை அடிப்பார். நேற்று முன் தினம் இரவு, வழக்கம் போல இவருக்கும், பெற்றோருக்கும் வாக்குவாதம் நடந்தது. அப்போது கோபமடைந்த ஷாஹீத் அலி, சுத்தியலால் தந்தையையும், தாயையும் கண் மூடித்தனமாக தாக்கி கொலை செய்தார்.
பின், இரவு முழுதும் பெற்றோர் உடல்களின் அருகில் இருந்தார். நேற்று காலை 9:00 மணியளவில், போலீஸ் உதவி எண் 112ல் தொடர்பு கொண்டு, நடந்ததை கூறினார். இதையடுத்து அங்கு வந்த பிரம்மாவர் போலீசார், ஷாஹீத் அலியை கைது செய்தனர்.
போலீஸ் நிலையத்தில் விசாரித்த போது, 'என் தந்தை தினமும் என்னை தேவையின்றி திட்டுவார்; அடிப்பார். இதற்கு என் தாயும் உடந்தையாக இருந்தார். இருவரும் என்னை மன ரீதியில் கொடுமைப்படுத்தினர். இதனால், இருவரையும் கொலை செய்தேன்' என தெரிவித்துள்ளார்.
