தேவ கவுடாவை மீண்டும் ராஜ்யசபா எம்.பி.,யாக்க முடிவு
தேவ கவுடாவை மீண்டும் ராஜ்யசபா எம்.பி.,யாக்க முடிவு
ADDED : மார் 25, 2026 07:02 AM

: முன்னாள் பிரதமர் தேவ கவுடாவை, மீண்டும் ராஜ்யசபா எம்.பி., ஆக்குவது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், மத்திய அமைச்சர் குமாரசாமி பேசியுள்ளார்.
ராஜ்யசபாவில், 12 நியமன உறுப்பினர்கள் உட்பட 245 உறுப்பினர்கள் உள்ளனர். ராஜ்யசபா எம்.பி.,க்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை, மாநிலங்களில் உள்ள எம்.எல்.ஏ.,க்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கர்நாடகா, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி.,க்கள் பலரின் பதவிக்காலம் ஜூனில் முடிவடைகிறது. மே மாதத்தில் இம்மாநிலங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடக்கிறது.
கர்நாடகாவில் முன்னாள் பிரதமரும், ம.ஜ.த., தேசிய தலைவருமான தேவகவுடா, பா.ஜ.,வின் ஈரண்ண கடடி, நாராயண், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரின் பதவிக்காலம் ஜூன், 25ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதில், காங்கிரஸ் சுலபமாக மூன்று இடங்களை கைப்பற்றி விடும். மீதமுள்ள ஒரு இடத்துக்கு மீண்டும் தேவகவுடாவை நிறுத்த வேண்டும் என, குமாரசாமியிடம் ம.ஜ.த.,வினர் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக, டில்லியில் பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், சுகாதார துறை அமைச்சர் நட்டா ஆகியோரை மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமியும், அவரது மகனும், ம.ஜ.த., இளைஞர் அணி தலைவருமான நிகில் குமாரசாமியும் சந்தித்துப் பேசினர்.
இதன்பின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்தனர். அப்போது அவரிடம் குமாரசாமி, 'சமீப காலமாக மாநில பா.ஜ., தலைவர்கள், எங்களுடன் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக முடிவெடுக்கின்றனர்' என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், கர்நாடக மேல்சபையில் காலியாகும் நான்கு இடங்களுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதற்கு முன், எங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. கடந்த முறை தென்கிழக்கு ஆசிரியர் தொகுதியில் ம.ஜ.த., வெற்றி பெற்றிருந்தது.
இம்முறை இந்த தொகுதிக்கான வேட்பாளர்களை அவர்களே தேர்வு செய்து, கட்சி மேலிடத்துக்கு அனுப்பி வைத்து உள்ளனர். எங்களுக்கு பெங்களூரு ஆசிரியர் தொகுதியை கொடுத்திருப்பது சரியல்ல.
அதேபோன்று, மே மாதம் நான்கு இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடக்க உள்ளது. அதில், மூன்று இடங்களில் காங்கிரஸ் சுலபமாக வெற்றி பெற்றுவிடும். மீதமுள்ள ஒரு இடத்தை முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு ஒதுக்கி, அவரை மீண்டும் எம்.பி.,யாக்க வேண்டும்.
ஆனால், முன்னாள் முதல்வர் எடியூரப்பா குடும்பத்தினர், முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவை, ராஜ்யசபா எம்.பி.,யாக்க முயற்சிக்கின்றனர்.
இவ்விஷயத்தில் நீங்கள் தலையிட்டு, தேவகவுடாவுக்கு சீட் வழங்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- நமது நிருபர் -
