ADDED : ஜூன் 23, 2025 09:09 AM

தங்கவயல் : ஆண்டர்சன் பேட்டை அருகே உள்ள பைரேஹள்ளி என்ற கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் விழுந்த மான் ஒன்றை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.
தங்கவயல், ஆண்டர்சன் பேட்டை சுற்றுப்புற கிராமங்களில், அரியவகை மான்கள் உள்ளன. அவை இரை தேடி அவ்வப்போது நடமாடுவது வழக்கம். இந்நிலையில், பைரேஹள்ளி என்ற கிராமத்தின் பாழடைந்த கிணற்றில் கிளை மான் ஒன்று தவறி விழுந்துள்ளது.
இதை பார்த்த தெரு நாய்கள் தொடர்ந்து குரைத்து கூச்சலிட்டன. இதையடுத்து, கிணற்றின் அருகே சென்று சிலர் பார்த்தபோது, அங்கு மான் விழுந்து மேல வர முடியாமல் தவித்ததை கண்டறிந்தனர்.
தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து, கிராம மக்கள் உதவியுடன் மானை மீட்டனர். மானுக்கு உடலில் காயம் ஏற்பட்டிருந்தது.
கால்நடைத் துறை மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளித்தனர். பின், அந்த மானை வனத்துறையில் கொண்டு சென்று விட்டனர்.
