அமைச்சரவை விரிவாக்கம் தாமதம் உட்கட்சி பிரச்னையே காரணம்: அசோக்
அமைச்சரவை விரிவாக்கம் தாமதம் உட்கட்சி பிரச்னையே காரணம்: அசோக்
ADDED : ஜூன் 24, 2026 12:21 AM

பெங்களூரு: ''அமைச்சரவை விரிவாக்கம் தாமதமாவதற்கு உட்கட்சி பிரச்னையே காரணம்,'' என, எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் நேற்று அளித்த பேட்டி:
முதல்வர் சிவகுமார் தலைமையிலான அமைச்சரவையில், வெறும், 13 அமைச்சர்களே உள்ளனர். அமைச்சரவையில் இன்னும், 20 இடங்கள் நிரப்பப்பாடமலேயே உள்ளன. அமைச்சரவை விரிவாக்கம் தாமதமாவதற்கு உட்கட்சி பிரச்னையே காரணம். சிவகுமார் குதிரை பேரத்தில் நிபுணராக இருக்கிறார்.
கர்நாடகாவில் உள்ள, 46,174 அரசு பள்ளிகளில், 16,800க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. மாநிலத்தில் உள்ள, 40 சதவீத பள்ளிகளில் வகுப்பறைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
மாநில நலனில் அக்கறை செலுத்தாமல், முதல்வரும், அவரது நண்பர்களும் பதவியை தக்க வைத்துக் கொள்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.
மேல்சபை தேர்தலில் குறுக்கு ஓட்டு செலுத்திவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டப்படும்.
தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோவிலில் எம்.எல்.ஏ.,க்கள் யாரும் சத்தியம் செய்ய மாட்டார்கள். கட்சி பிரச்னை கட்சி அலுவலகத்திலேயே தீர்க்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
