நிவாரணம் வழங்க தாமதம் கே.கே.ஆர்.டி.சி., பஸ் 'ஜப்தி'
நிவாரணம் வழங்க தாமதம் கே.கே.ஆர்.டி.சி., பஸ் 'ஜப்தி'
ADDED : ஜூன் 06, 2026 11:30 PM
பீதர்: விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு, நிவாரணம் வழங்காமல் அலட்சியப்படுத்தியதால், கல்யாண கர்நாடகா போக்குவரத்து கழகத்தின் பஸ்சை 'ஜப்தி' செய்யும்படி, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீதர் மாவட்டம், பால்கி தாலுகாவின், டெக்னி கிராமத்தின் அருகில் கடந்த, 2021ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதியன்று, கல்யாண கர்நாடகா போக்குவரத்துக்கழக பஸ் விபத்தில் சிக்கியது. இதில் ரேகா சுனில், 35, என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக, பீதரின் கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு பதிவானது.
விசாரணை நடத்திய நீதிமன்றம், விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு, 22.50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, கே.கே.ஆர்.டிசி.,க்கு,2025ன் நவம்பரில் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டு ஏழு மாதங்களாகியும், நிவாரண தொகை வழங்கவில்லை. இதை பற்றி பெண்ணின் குடும்பத்தினர், நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
இதை தீவிரமாக கருதிய நீதிமன்றம், தன் உத்தரவை அலட்சியப்படுத்திய கே.கே.ஆர்.டி.சி., பஸ்சை, ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டது. இதன்படி பஸ்சை நேற்று ஜப்தி செய்த போலீசார். நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினர்.
