/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
10 ஏக்கர் நிலத்தை வனமாக்கிய பல் மருத்துவர்
/
10 ஏக்கர் நிலத்தை வனமாக்கிய பல் மருத்துவர்
ADDED : அக் 25, 2025 10:58 PM

இயற்கையின் மீதான அன்பால், தனது 10.34 ஏக்கர் நிலத்தில் 150க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த 15,000 செடிகளை நட்டதால், தற்போது வனம் போன்று காட்சியளிக்கிறது. பல வகை பறவைகளின் இருப்பிடமாக காணப்படுகிறது.
வனங்களை அழித்து பல்வேறு பொழுது போக்கு கேளிக்கை விடுதிகள், சொகுசு விடுதிகள் கட்டி வரும் வேளையில், கதக் நகரை சேர்ந்த ஒரு பல் மருத்துவர், தனக்கு சொந்தமான 10.34 ஏக்கர் நிலத்தை 'குட்டி' வனமாக மாற்றி உள்ளார்.
பல் மருத்துவர் கதக் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதீப் உகலாடா, பல் மருத்துவர். நகரில் கிளினிக் நடத்தி வருகிறார். இவர், இயற்கையின் மீது ஆர்வம் கொண்டவர். 2016ல் ஒரு நாள் 'டிவி'யில் காடுகள் அழிப்புகள் குறித்து பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
அப்போது அவருக்கு, வனத்தை பாதுகாக்க என்ன செய்ய முடியும் என்று யோசித்தபோது, 'வன வேளாண்மை' என்ற யோசனை அவருக்கு நினைவுக்கு வந்தது.
மாவட்டத்தின் ஹூய்லகோல் கிராமம் அருகில் 10.34 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு பருத்தி, கொண்டைக்கடலை பயிரிடப்பட்டிருந்தது. இந்த நிலத்தை வனமாக மாற்ற வேண்டும் என்ற யோசனை உதித்தது. தன் யோசனைக்கு குடும்பத்தினர் ஆதரவு அளிப்பர் என்று நினைத்தார்.
ஆனால் எதிர்ப்பு தான் கிளம்பியது. ஆனாலும், அவர்களை சமாதானப்படுத்தி, 150க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த 15,000 மர விதைகளையும், செடிகளையும் பயிரிட்டார்.
கரிம உரங்கள் இத்திட்டத்தை அவர் துவங்கியபோது, தண்ணீர் பற்றாக்குறை இருந்தது. மழைநீர் வீணாகாமல் இருக்க, 10 ஏக்கர் நிலங்களை சுற்றிலும் மூன்று அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டினார். பின், மரக்கன்றுகளை நட்டார். மரங்கள் செழிப்பாக வளர, கரிம உரங்களுக்காக, ஆண்டுதோறும் 1.50 லட்சம் ரூபாய் வீதம் செலவழித்தார்.
இதன் பின், 2022 முதல் எந்த செலவும் செய்யவில்லை. வளர்ந்த மரங்களாக குட்டி வனமாக காட்சி அளிக்கும் பகுதிக்கு பல்வேறு வகையான பறவைகள் வர துவங்கின.
அவ்வாறு வரும் பறவைகள், வனப்பகுதியில் இருந்து கொண்டு வரும் உணவை சாப்பிட்டு, கீழே போட்ட விதைகளும், இங்கு மேய்ச்சலுக்கு வந்த ஆடுகளின் சாணமும், விதைகள், தாவரங்களுக்கு உரமாக மாறின. இதனால் 90 சதவீத வனப்பகுதி இயற்கையாகவே வளர்ந்துள்ளன.
விளைச்சல் நிலத்தை வனமாக மாற்றுவது குறித்து வனத்துறையிடம் இருந்து எந்த ஆலோசனையும் இவர் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலத்தில் தற்போது சந்தனம், ஹெப்பேவு, மஹோகனி, ஹோங்கே, மூங்கில் உட்பட பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. சில மரங்கள் 20 அடிக்கு மேல் உயரமாக வளர்ந்துள்ளன. ஏராளமான காட்டு பழ மரங்களும் உள்ளன. மொத்த நிலத்தில் 70 சதவீதம் வனப் பகுதியாகவும், 30 சதவீதம் புல்வெளியாகவும் உள்ளன.
சில நேரங்களில் ஓநாய்களும் இங்கு வந்து செல்கின்றன. ஆரம்பத்தில் இவரின் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர், உறவினர்கள், தற்போது விடுமுறை நாட்களில் இந்த 'குட்டி' வனத்துக்கு வந்து பொழுது போக்குகின்றனர்.
டாக்டர் பிரதீப் கூறுகையில், ''வன மேலாண்மைக்காக எந்த வருமானத்தையும் எதிர்பார்க்கவில்லை. சுற்றுச்சூழலுக்காகவும், மன அமைதிக்காகவும் இதை வளர்க்கிறேன்,'' என்றார்.
- நமது நிருபர் -

