லட்சுமி யானையை இடம் மாற்றியதால் பக்தர்கள் அதிருப்தி
லட்சுமி யானையை இடம் மாற்றியதால் பக்தர்கள் அதிருப்தி
ADDED : மே 28, 2026 02:50 AM

விஜயநகரா: உலக பிரசித்தி பெற்ற, ஹம்பியின் விருபாக்ஷா கோவில் யானை லட்சுமியை, பக்தர்களின் எதிர்ப்புக்கு இடையே, வனத்துறையினர் கோலாருக்கு இடம் மாற்றியுள்ளனர்.
விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் தாலுகாவில் உள்ள ஹம்பி, உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். இங்குள்ள விருபாக்ஷா கோவில் புராதன பிரசித்தி பெற்றதாகும்.
இந்த கோவிலில், லட்சுமி என்ற யானை, பல ஆண்டுகளாக வசிக்கிறது. கோவிலின் பூஜைகள், திருவிழாவின் போது யானை பயன்படுத்தப்படும்.
மிருதுவான குணம் கொண்ட லட்சுமி யானை, பக்தர்களுக்கு மிகவும் பிடித்தமானது. யாருக்கும் எந்த தொந்தவும் கொடுத்தது இல்லை. இங்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணியருக்கு லட்சுமி யானை, நல்ல பொழுது போக்காக இருந்தது.
இந்நிலையில் இந்த யானை, சில நாட்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்படுகிறது.
இதற்கு கூடுதல் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்ததால், கோலாருக்கு அனுப்ப முடிவு செய்தனர்.
ஆனால் யானையை எந்த காரணத்தை கொண்டும், கோலாருக்கு இடம் மாற்ற கூடாது. ஹம்பியில் வைத்து தான் சிகிச்சையளிக்க வேண்டும் என, அப்பகுதியினரும், பக்தர்களும் வலியுறுத்தினர். இது தொடர்பாக, நேற்று முன் தினம் போராட்டமும் நடத்தினர்.
இதை பொருட்படுத்தாத வனத்துறை அதிகாரிகள், நேற்று அதிகாலை 1:00 மணிக்கு, லட்சுமி யானையை லாரியில் ஏற்றி, கோலாருக்கு அனுப்பினர். பகல் நேரத்தில் யானையை அனுப்பினால், அப்பகுதியினர், பக்தர்களின் எதிர்ப்பை சமாளிப்பது கஷ்டம் என்பதால், இரவோடு இரவாக யானையை இடம் மாற்றினர்.
பல ஆண்டுகளாக தங்களின் சொந்த குழந்தையை போன்று, பராமரித்து வந்த லட்சுமி யானையை, லாரியில் ஏற்றும் போது பாகன் குடும்பத்தினர் யானையை கட்டிப்பிடித்து கதறி அழுதனர்.
யானைக்கு சிகிச்சை அவசியம் என்பதால், வேறு வழியின்றி யானையை கோலாருக்கு அனுப்பியதாக, வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மனிதர்களுக்கு உடல் நிலை பாதித்தால், எப்படி சிகிச்சை அவசியமோ, அதே போல தான் யானைகளுக்கும் சிகிச்சை அவசியம். ஹம்பியில் கால்நடை சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் இல்லை. எனவே கோலாருக்கு அனுப்பப்பட்டது. நான் அங்குள்ள டாக்டர்களிடம் பேசினேன். மூன்று மாதங்களில் யானை குணமடையும் என, கூறியுள்ளனர். அதன் பின், அந்த யானை மீண்டும் ஹம்பிக்கு அழைத்து வரப்படும் . - கவிதா மன்னிகேரி, கலெக்டர், விஜயநகரா
