/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'மேட்ச் பிக்சிக்' செய்து ஆர்.சி.பி., வென்றதா?
/
'மேட்ச் பிக்சிக்' செய்து ஆர்.சி.பி., வென்றதா?
ADDED : ஜூன் 06, 2025 11:44 PM
பெங்களூரு: ஐ.பி.எல்., கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 'மேட்ச் பிக்சிக்' செய்து, ஆர்.சி.பி., அணி கோப்பை வென்றதா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
ஐ.பி.எல்., எனும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள், 2008 முதல் நடக்கின்றன. ஒரு முறை கூட ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றது இல்லை.
இந்த ஆண்டு நடந்த 18வது ஐ.பி.எல்., சீசனில், கடந்த 3ம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் வென்று பெங்களூரு அணி முதல்முறை சாம்பியன் ஆனது. கர்நாடகா முழுதும் ஆர்.சி.பி., ரசிகர்கள் கொண்டாடினர். கடந்த 4ம் தேதி சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 ரசிகர்கள் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக, கப்பன் பார்க் முன்னாள் இன்ஸ்பெக்டர் கிரிஷ் எழுத்துப்பூர்வமாக அளித்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவானது. கிரிஷ் அளித்த புகாரில் கூறப்பட்டு இருந்த சில தகவல்கள் வெளியே கசிந்துள்ளன.
புகாரில் அவர் கூறியிருந்ததாவது:
கடந்த 3ம் தேதி இரவு குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் நடந்த ஐ.பி.எல்., கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதின. அன்றைய தினம் இரவு 7:00 மணிக்கு டாஸ் போடப்பட்டது. அதற்கு முன்பே மாலை 6:00 மணிக்கு கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் நிர்வாக அதிகாரி சுபேந்து கோஷ், என்னிடம் மொபைல் போனில் பேசினார்.
'ஆர்.சி.பி., கோப்பை வென்றுவிடும். நாளை சின்னசாமி மைதானத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி வேண்டும்' என்று கேட்டார். நான் முதலில் அனுமதி வழங்கவில்லை.
'ஆனாலும் அனுமதி கேட்டு, கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன், ஆர்.சி.பி., அணியினர் எனக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். பெங்களூரு அணி கோப்பையை வென்றதும், ஆர்.சி.பி., நிர்வாகம், எங்களிடம் எந்த அனுமதியும் பெறாமல், சமூக ஊடகங்களில் வெற்றி அணிவகுப்பு என்று பதிவிட்டனர். இதை பார்த்தே, 4ம் தேதி ரசிகர்கள் திரண்டு வந்தனர்.
'ஹெச்.ஏ.எல்., விமான நிலையத்தில் இருந்து வீரர்களை பத்திரமாக அழைத்து வந்தோம். விதான் சவுதாவில் நடந்த நிகழ்ச்சிக்கும் பாதுகாப்பு வழங்கினோம். மைதானம் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது, போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆர்.சி.பி., - டி.என்.ஏ., - கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் குழப்பத்தால் தான் நெரிசல் ஏற்பட்டது' என்று புகாரில் அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த புகாரை வைத்து பார்த்தால், இறுதி போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெறும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்தது போன்று உள்ளது. இதனால் மேட்ச் பிக்சிங் செய்து, ஆர்.சி.பி., கோப்பையை வென்றதா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.