'தாவணகெரே மருத்துவமனை தீ விபத்துக்கு டாக்டர்களின் பொறுப்பின்மையே காரணம்'
'தாவணகெரே மருத்துவமனை தீ விபத்துக்கு டாக்டர்களின் பொறுப்பின்மையே காரணம்'
ADDED : ஜூலை 03, 2026 04:37 AM
தாவணகெரே: அரசு மருத்துவமனையின், அறுவை சிகிச்சை அறையில் தீப்பிடித்ததில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் சேதமடைய, மருத்துவமனை டாக்டர்களின் பொறுப்பின்மையே காரணம் என, விசாரணை குழு அறிக்கை அளித்துள்ளது.
தாவணகெரே நகரில் உள்ள, மாவட்ட அரசு மருத்துவமனையின், அறுவை சிகிச்சை அறையில், ஜூன் 30ம் தேதியன்று, எதிர்பாராமல் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் தீக்கிரையாகின.
இதற்கான காரணம் குறித்து கண்டறிய, மருத்துவமனை நிர்வாகம் துணை கமிஷனர் சந்தோஷ்குமார் தலைமையில், விசாரணை குழு அமைத்தது. குழுவினரும் விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தீ விபத்து நடந்த அறுவை சிகிச்சை அறையில் இருந்த மயக்க மருந்து இயந்திரம் உட்பட பல இயந்திரங்கள் நல்ல நிலையில் இல்லை. இந்த இயந்திரங்களில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரிகள், முற்றிலுமாக பாழாகியுள்ளன.
இது குறித்து, மருத்துவமனை இயந்திரங்களின் நிர்வகிப்பு பொறுப்பை ஏற்றிருந்த தனியார் ஏஜன்சி, ஏற்கனவே பேட்டரிகளை ஆய்வு செய்து, உடனடியாக மாற்றும்படி மருத்துவமனை நிர்வாகத்துக்கு எழுத்து பூர்வமாக அறிக்கை அளித்திருந்தது. இந்த அறிக்கையை, மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் பொருட்படுத்தவில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
மற்றொரு பக்கம், மருத்துவமனையில் தீ விபத்து நடந்ததை தீவிரமாக கருதிய சுகாதாரத்துறை அமைச்சர் காதர், சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்கும்படி, உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, அதிகாரிகள், நேற்று தாவணகெரே மாவட்ட மருத்துவமனைக்கு நேற்று வந்து, தலைமை மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
சம்பவம் நடந்த நாளன்று, பணியில் இருந்த நர்சிங் ஊழியர்கள், தொழில்நுட்ப ஊழியர்களிடம் தகவல் சேகரித்தனர்.
