ADDED : ஜூன் 16, 2026 06:23 AM
பெங்களூரு: சாலையில் நடந்து சென்ற, 4 வயது சிறுமியை தெரு நாய்கள் கடித்து இழுத்து சென்ற வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியுள்ளது.
பெங்களூரு, சஹகார நக ரின், சி.க்யூ.ஏ.எல்., லே - அவுட்டில், கட்டுமான பணி நடக்கும் சாலையில், நேற்று முன் தினம் இரவு 7:00 மணியளவில், 4 வயது சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஐந்தாறு நாய்கள் அவர் மீது பாய்ந்து கடித்தன. நாய்களிடம் இருந்து தப்பியோட சிறுமி முயற்சித்தும் முடியவில்லை.
நாய்கள் சிறுமியை சிறிது துாரம் இழுத்து சென்றன. இதை கண்ட அப்பகுதியினர், நாய்களை விரட்டி சிறுமியை காப்பாற்றினர். இவரது கை, கால், முகத்தில் பலத்த காயங்களுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
சிறுமியை நாய்கள் இழுத்து செல்லும் வீடியோ, நேற்று பரவியது. அசம்பாவிதத்துக்கு மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என, பலரும் குற்றம்சாட்டினர். பெங்களூரில் தெரு நாய்களின் தொல்லை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சிறார்கள், மூத்த குடிமக்களை நாய்கள் அதிகம் கடிக்கின்றன.
இருசக்கர வாகன பயணிகளும் பாதிப்படைகின்றனர். விரட்டி வரும் நாயிடம் இருந்து தப்பிக்க, அவசரமாக பைக் ஓட்டும் போது தவறி விழுந்து காயமடைந்த சம்பவங்கள், ஆங்காங்கே நடக்கின்றன. மக்கள் இவ்வளவு பாதிப்படைந்தும், தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள், நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
