ADDED : ஜூன் 12, 2025 07:58 AM

உத்தர கன்னடா : பிளாஸ்டிக் மீன் வலையை சாப்பிட்டதால் உயிரிழந்த அரியவகை டால்பின், கார்வாரின் தாகூர் கடற்கரையில் கரை ஒதுங்கியது.
உத்தர கன்னடா மாவட்டம், கார்வாரில் தாகூர் கடற்கரையில், இறந்து மூன்று நாட்களான, 'ஹம்பக்' என்ற அரியவகை டால்பின் இறந்து கிடப்பதாக, நேற்று வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர்கள், டால்பினின் உடலை ஆய்வு செய்த போது, அதன் வயிற்றில் பிளாஸ்டிக் மீன் வலை இருந்தது தெரிந்தது.
கார்வார் வனத்துறை அதிகாரி நாயக் கூறியதாவது:
பிளாஸ்டிக் வலையை சாப்பிட்டதால், டால்பின் இறந்தது தெரிய வந்துள்ளது. இதுபோன்று மாவட்டத்தின் மற்ற கடற்கரைகளிலும், பிளாஸ்டிக் உட்கொண்ட மீன்கள் இறந்து கரை ஒதுங்குவது அதிகரித்து வருகிறது.
இது தவிர, பாறைகள், படகுகள் மீது மோதியும் மீன்கள் இறக்கின்றன. பிளாஸ்டிக்கால் கடல்வாழ் உயிரினங்களான மீன்கள், ஆமைகளே அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. எனவே, பிளாஸ்டிக் பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
கடல் பகுதிகளில் பிளாஸ்டிக்கை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன. ஆண்டுதோறும் கடற்கரையில் 'கடற்கரை தினம்' கொண்டாடப்பட்டு, மக்களிடம் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனாலும், இதை தடுக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
