தந்தை - மகனுக்கு கத்திக்குத்து போதை வாலிபர் கைது
தந்தை - மகனுக்கு கத்திக்குத்து போதை வாலிபர் கைது
ADDED : ஜூன் 01, 2026 12:22 AM
ஆனேக்கல்: காரை ரிவர்ஸ் எடுக்க கூறியதால், தந்தை - மகனை கத்தியால் குத்திய, போதை வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு ரூரல் ஆனேக்கல் டவுன் திம்மராயசாமி கோவில் தெருவில் வசிப்பவர் நவீன், 42, இவரது மகன் தாரகேஷ், 16. இவர்கள் இருவரும் நேற்று காலையில் கோவில் அருகே உள்ள குறுகிய தெரு வழியாக நடந்து சென்றனர். அந்த தெருவில் ஒரு கார் வந்தது. காரை ஓட்டி வந்தவர் வழிகேட்டு ஹார்ன் அடித்தார். விலகுவதற்கு இடம் இல்லை; காரை 'ரிவர்ஸ்' எடுங்கள் என்று நவீன் கூறினார்.
இதை கேட்டு காரில் இருந்த இருவர் கோபம் அடைந்தனர். கீழே இறக்கி வந்து நவீனை தாக்கியதுடன், காரில் இருந்த கத்தியை எடுத்து குத்தினர். தடுக்க முயன்ற தாரகேஷுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தந்தை, மகனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அவர்களை கத்தியால் குத்திய ஒருவரை மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் ஆதி, 23, என்பதும், குடிபோதையில் இருந்ததும் தெரிந்தது. இன்னொருவரை போலீஸ் தேடுகிறது.
