UPDATED : மார் 19, 2026 05:34 AM
ADDED : மார் 19, 2026 05:32 AM

குடகு மாவட்டம் என்றாலே, பனி படர்ந்த மலைகள், இயற்கை கொஞ்சும் வனப்பகுதிகள், பசுமையான தோட்டங்கள் கண் முன்னே வந்து செல்லும். குடகு மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி மலை, சுற்றுலா பயணியர் மற்றும் மலையேற்றம் செய்யும் சாகச பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாகும் .
5,000 அடி உயரம் குடகு மாவட்டம், விராஜ்பேட் தாலுகாவில் பிரம்மகிரி மலை அமைந்துள்ளது. இந்த மலை, கடல் மட்டத்தில் இருந்து, 5,000 அடி உயரத்தில் உள்ளது.
அடர்ந்த வனம் இங்குள்ளது. பிரம்மகிரி, மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். கர்நாடக மக்களின் ஜீவநதியான காவிரி உற்பத்தியாகும், திருத்தலம் உள்ள இடமாகும்.
பிரம்மகிரியில் 1974ல், வன விலங்குகள் சரணாலயம் அமைக்கப்பட்டது. இந்த மலை பூலோக சொர்க்கம் என்றால் மிகை இல்லை.
மலையின் வனப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான அபூர்வ மரங்கள், ஏலக்காய் தோட்டங்கள், மருத்துவ குணம் கொண்ட மூலிகைச்செடி, கொடிகள் நிறைந்துள்ளன.
அருமையான நீர் வீழ்ச்சிகள் உள்ளன. யானை, சிறுத்தை, கரடி, மான் உட்பட பல்வேறு விலங்குகள் வசிக்கின்றன.
மலையின் உச்சியில் நின்று பார்த்தால், கண்களை கொள்ளை கொள்ளும் பசுமையான காட்சிகளை காணலாம்.
பிரம்மகிரி மலை, ராமாயணத்துடன் தொடர்புடையது. இலங்கை வேந்தன் ராவணனால் கடத்தப்படும் சீதையை தேடி செல்லும் ராமனும், லட்சுமணனும், பிரம்மகிரிக்கு வருகின்றனர்.
அப்போது லட்சுமணனுக்கு, தாகம் ஏற்படுகிறது. எங்கு தேடியும் தண்ணீர் இல்லை. இதனால் ராமன் அம்பு எய்து, நீருற்றை உருவாக்கினார்.
லட்சுமண தீர்த்தம் எனவே இங்கு பாயும் ஆற்றை லட்சுமண தீர்த்தம் என்று அழைக்கின்றனர். இந்த ஆற்றில் இருந்து உருவான நீர் வீழ்ச்சி, இருப்பு நீர் வீழ்ச்சி என, அழைக்கப்படுகிறது.
இந்த மலைக்கு பிரம்மன் வந்ததால், பிரம்மகிரி என, பெயர் ஏற்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சியில், பிரம்மகிரியை கோடைக்கால வாழ்விடமாக பயன்படுத்தினராம். மலையில் உள்ள சரணாலயம் 181 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். மலையில் விஷ்ணு கோவில் அமைந்துள்ளது. இது புராதன கோவிலாகும்.
கர்நாடகா மற்றும் கேரளா எல்லைப் பகுதியில், பிரம்மகிரி மலை அமைந்துள்ளதால், இரு மாநிலங்களின் சுற்றுலா பயணியர் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.
மலையேற்றத்துக்கும் இளைஞர்கள், இளம் பெண்கள் வருகின்றனர். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணியர், பெருமளவில் வருகின்றனர்.
- நமது நிருபர் -
