ADDED : அக் 21, 2025 04:19 AM
கலபுரகி: சிஞ்சோலி தாலுகாவின் பல்வேறு கிராமங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்தனர்; வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
கலபுரகி மாவட்டம், சிஞ்சோலி தாலுகாவின் கடிகேஸ்வரா, குபநுாரா, ஹுடா உட்பட சுற்றுப்புற கிராமங்களில், நேற்று காலை 8:15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மூன்று முதல் முதல் நான்கு வினாடிகள் பூமிக்குள் இருந்து பெரும் சத்தம் கேட்டது. வீட்டில் இருந்த பொருட்கள் ஆட்டம் கண்டன.
கலக்கமடைந்த கிராமத்தினர், சிறார்கள், மூத்த குடிமக்களை அழைத்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். வீட்டுக்குள் செல்லாமல், திறந்த வெளியில் அமர்ந்திருந்தனர். சிஞ்சோலியின் கிராமங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதை, இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் உறுதிப்படுத்தியது. ரிக்டர் கருவியில் 2.5 ரிக்டராக பதிவாகியுள்ளது.
இந்த பகுதிகளில் சில ஆண்டுகளாக அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது. நடப்பாண்டு செப்டம்பர் 11ல், ஆலந்த் தாலுகாவின் சில கிராமங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மாவட்டத்தில் நேற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் பீதியில் உள்ளனர். நேற்றைய நிலநடுக்கத்தால், அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏற்படவில்லை.
