ADDED : செப் 17, 2026 11:18 PM
விஜயபுரா: பசவனபாகேவாடி தாலுகாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்கத்தின் தீவிரம், 3.6 ரிக்டராக பதிவாகி இருந்தது.
விஜயபுரா மாவட்டம், பசவன பாகேவாடி தாலுகா உட்பட அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. மக்கள் பீதியுடன், வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். வீட்டுக்குள் செல்ல பயந்து, விடியவிடிய வெளியே அமர்ந்திருந்தனர்.
கர்நாடக இயற்கை பேரிடர் கண்காணிப்பு நிலைய அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, நேற்று அதிகாலை நடந்த நில நடுக்கத்தின் தீவிரம், 3.6 ரிக்டராக பதிவாகி இருந்தது.
இங்களேஷ்வரா கிராம பஞ்சாயத்து எல்லையில், வட மேற்கு பகுதியில் இருந்து 2.4 கி.மீ., தொலைவில் நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது. பூமியின் 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. விஜயபுராவில் சமீப நாட்களாக, அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது. பெரும் அசம்பாவிதம் நடக்குமோ என்ற கலக்கத்துடன், மக்கள் வாழ்கின்றனர்.
