நடிகை ரம்யா குறித்து ஆபாச கருத்து பதிவிட்டவர்களை கைது செய்ய தீவிரம்
நடிகை ரம்யா குறித்து ஆபாச கருத்து பதிவிட்டவர்களை கைது செய்ய தீவிரம்
ADDED : ஏப் 14, 2026 05:59 AM

பெங்களூரு: நடிகை ரம்யா குறித்து சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்து பதிவிட்டவர்களை கைது செய்யும் முயற்சியில் சி.சி.பி., போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
கன்னட திரை உலகில் முன்னணி நடிகை ரம்யா. இவர், மாண்டியா தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.பி., ஆவார். சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு எதிராக ரம்யா சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தார்.
இதனால், ஆத்திரம் அடைந்த தர்ஷன் ரசிகர்கள், ரம்யா குறித்து ஆபாசமாக கருத்துகளை பதிவிட்டனர். இது குறித்து கடந்த ஆண்டு ஜூலையில், பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் ரம்யா புகார் அளித்தார்.
இவ்வழக்கு சி.சி.பி., என்ற மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக, சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துக்கள் பதிவிட்ட, 43 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில், 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின், அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு பெங்களூரு, 46வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடக்கிறது. இவ்வழக்கில் மீதமுள்ள குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
அதன்படி, மீதமுள்ள, 29 பேரை கைது செய்யும் முயற்சியில் சி.சி.பி., போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். பெங்களூரு, மைசூரு, ஹாவேரி, சிக்கமகளூரில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
விரைவில் அனைவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவர் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
