ADDED : மே 04, 2025 12:23 AM
சோழதேவனஹள்ளி: புதிதாக வாங்கிய காருக்கு, மாதத்தவணை செலுத்த முடியாமல் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
கலபுரகியைச் சேர்ந்தவர் தேவராஜ், 21. இவர் பிழைப்புத் தேடி பெங்களூருக்கு வந்தார். சோழதேவனஹள்ளியின், சிக்கபானவாராவில் வசித்து வந்தார். ஒரு கார் வாங்கினால், அதை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாம் என, திட்டமிட்டார்.
அதன்படி சிறுக, சிறுக பணம் சேர்த்து, கடந்தாண்டு முன்பணம் கட்டி, கார் வாங்கினார். இதை வாடகைக்கு விட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் காருக்கு மாதத்தவணை செலுத்த நினைத்திருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி, வாடகை கிடைக்கவில்லை. பொருளாதார நெருக்கடியில் சிக்கினார்.
இரண்டு மாதங்களாக காருக்கு மாதத்தவணை செலுத்த முடியவில்லை. வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது. மனம் வருந்திய தேவராஜ், நேற்று அதிகாலை வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சோழதேவனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
