ஏ.ஐ., வாயிலாக எரிசக்தி சேமிப்பு; குடிநீர் வாரிய தலைவர் பெருமிதம்
ஏ.ஐ., வாயிலாக எரிசக்தி சேமிப்பு; குடிநீர் வாரிய தலைவர் பெருமிதம்
ADDED : பிப் 17, 2026 11:39 PM

டில்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த உச்சி மாநாட்டில், தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவருமான ராம்பிரசாத் மனோகர் நேற்று பேசியதாவது:
நகர்ப்புற நீர் மேலாண்மையில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பதற்கான உலகளாவிய மாதிரியாக, பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் உருவெடுத்து உள்ளது.
நீரேற்று நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில், செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் எரிசக்தியை சேமித்து உள்ளோம்.
இதன்மூலம் ஆண்டிற்கு 40 கோடி ரூபாய் மிச்சமாகிறது. இது வெறும் நிதி வெற்றி மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் கிடைத்த வெற்றியாகும்.
நீர் கசிவு ஏற்படும் இடங்களை துல்லியமாக கண்டறிந்து, சட்டவிரோத இணைப்புகளை அடையாளம் காண ரோபோக்களை பயன்படுத்துகிறோம்.
விலைமதிப்பற்ற தண்ணீரை சேமிக்கவும், தேவைப்படும் மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யவும் தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம். நிலத்தடி நீர்மட்டத்தை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு சென்சார்களை பயன்படுத்தி உள்ளோம்.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரின் தொலைநோக்கு பார்வையில், தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் தீவிரமாக உள்ளோம். பெங்களூரை நீர் பாதுகாப்பில் முன்னோடியாக மாற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
- நமது நிருபர் -
