பி.ஓ.பி., விநாயகர் சிலைகளை பயன்படுத்த கூடாது: சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற ஆணையம் உத்தரவு
பி.ஓ.பி., விநாயகர் சிலைகளை பயன்படுத்த கூடாது: சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற ஆணையம் உத்தரவு
ADDED : ஆக 09, 2026 12:04 AM
பெங்களூரு: ''விநாயகர் சதுர்த்தியின் போது சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும். நீர்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பி.ஓ.பி., சிலைகளை பயன்படுத்த கூடாது,'' என சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற ஆணையத்தின் சிறப்பு கமிஷனர் சுஷ்மா கோட்போலே அறிவித்து உள்ளார்.
சுற்றறிக்கையில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது:
மாநிலம் முழுதும் உள்ள அனைத்து நீர் ஆதாரங்களையும் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கும் வகையில், கர்நாடக அரசு, 2023 செப்., 15ல் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவின்படி, கன உலோகங்கள் அடங்கிய ரசாயனம் அடிப்படையிலான வண்ணங்கள் பூசப்பட்ட பி.ஓ.பி., எனும் பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ, நீர் நிலைகளில் கரைக்கவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ராஜாஜி நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் குமார், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த கவலை தெரிவித்து உள்ளார். எனவே, சுற்றுச்சூழல், நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், பி.ஓ.பி.,யில் செய்யப்பட்ட சிலைகளின் உற்பத்தி, விற்பனையை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ் வொரு ஆண்டும் பண்டிகையின் போது, ஜி.பி.ஏ., வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் வழிபடப்படும் சிலைகள், ஏரிகள், கிணறுகள், பிற நீர் நிலைகளில் பரவலாக கரைக்கப்படுகின்றன. இந்த சிலைகள் பெரும்பாலும் கன உலோகங்கள், ரசாயனம் கலந்த வண்ணங்களால் அலங்கரிக்கப்படுகின்றன.
போதுமான முன்னெச்சரிக்கை, கவனிப்பு இல்லாமல் இச்சிலைகள் கரைக்கப்படுகின்றன. நீர் மற்றும் மண் மாசுபடுவதோடு, சுற்றுச்சூழலுக்கும் சேதம் ஏற்படுகிறது. அத்துடன் நீர்வாழ் உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக அமைகிறது.
இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, பி.ஓ.பி., பிற செயற்கை பொருட்களால் செய்யப்பட்ட விநாயர் சிலைகளை தயாரிப்பதும், விற்பதும், அவைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறுவோர் மீது அந்தந்த மாநகராட்சி கமிஷனர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
