/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் மெட்ரோ பணிக்காக 6,868 மரங்களை வெட்ட திட்டம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு
/
பெங்களூரில் மெட்ரோ பணிக்காக 6,868 மரங்களை வெட்ட திட்டம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு
பெங்களூரில் மெட்ரோ பணிக்காக 6,868 மரங்களை வெட்ட திட்டம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு
பெங்களூரில் மெட்ரோ பணிக்காக 6,868 மரங்களை வெட்ட திட்டம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு
ADDED : ஜன 10, 2026 06:45 AM
பெங்களூரு: பெங்களூரில் மெட்ரோ 3ம் கட்ட பணிக்காக, 6,868 மரங்களை வெட்ட, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். டில்லியை போன்று காற்று மாசுபாடு அதிகரிக்கும் என்றும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரு, உலக அளவில் வேகமாக வளர்ந்து விட்டது. ஐ.டி., நிறுவனங்களின் தலைநகராகவும் உள்ளது. பல லட்சம் ஊழியர்கள் ஐ.டி., நிறுவனங்களில் வேலை செய்கின்றனர்.
பல பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்பேட்டைகள், ஆயத்த ஆடை தொழிற்சாலைகள், மத்திய அரசு நிறுவனங்கள், துாதரகங்கள் உட்பட அனைத்தும் பெங்களூரில் உள்ளன.
நகரின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, வாகனங்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால், ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது.
முழு வீச்சில் ஒயிட்பீல்டு - செல்லகட்டா; மாதவாரா - சில்க் இன்ஸ்டிடியூட்; ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. காளேன அக்ரஹாரா - நாகவாரா; சில்க் போர்டு - விமான நிலையம் வரை மெட்ரோ பாதை பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.
இந்நிலையில், ஜே.பி.நகர் 4வது பேஸ் - கெம்பாபுரா வரை 32.15 கி.மீ., துாரத்திற்கும்; ஹொசஹள்ளி - கடபகெரே வரை 12.50 கி.மீ., துாரத்திற்கும்; ஹெப்பால் - சர்ஜாபூர் 28 கி.மீ., துாரத்திற்கும் புதிய மெட்ரோ பாதை துவங்க, மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைத்தது. 3ம் கட்ட பணிக்காக மெட்ரோ பாதை அமைக்கும் பணிகள் நடக்க உள்ளன.
இப்பணிகளுக்காக 6,868 மரங்களை வெட்டுவதற்கு, பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர்கள் கூறியதாவது:
கான்கிரீட் மயம் சில ஆண்டுகளுக்கு முன் வரை குளுகுளு நகரமாக இருந்த பெங்களூரின், பருவநிலை இப்போது மாறி விட்டது. பூங்கா நகரம் என்ற பெயர், தற்போது குப்பை நகரம் என மாறியுள்ளது. வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் மரங்களை வெட்டி, கான்கிரீட் மயமாக மாற்றுகின்றனர். மெட்ரோ முதல் கட்ட பணிக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக, மாற்று இடத்தில் மரம் நடுவதாக கூறினர். இதுவரை அப்படி எதுவும் நடப்படவில்லை.
நாங்கள் வளர்ச்சி பணிகளுக்கு எதிரானவர்கள் இல்லை; மரங்களை வெட்டுவதற்கு பதிலாக மாற்று வழியில் வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டும். பெங்களூரில் காற்றின் தரம் மாசுபட ஆரம்பித்து இருப்பதாக, முதல்வர் சித்தராமையாவே கூறி உள்ளார். மரங்களை தொடர்ந்து வெட்டினால், டில்லியை போன்று பெங்களூரிலும் காற்று மாசுபாடு அதிகரித்து விடும்.
இவ்வாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

