
பெங்களூரு எலஹங்காவின் கோகிலு லே - அவுட்டில், ஐந்து ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, 167 வீடுகள், கடந்த டிசம்பர், 20ம் தேதி இடிக்கப்பட்டன. இதன் மூலம், 80 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. ஆனால், வீடுகள் இடிக்கப்பட்டதற்கு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்தார். சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை என்று விமர்சித்தார். இதையடுத்து விழித்து கொண்ட காங்கிரஸ் மேலிடம், இந்தப் பிரச்னை தொடர்பாக, கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் ஆலோசித்தது.
அதன்பின், வீடுகளை இழந்தவர்களுக்கு, ராஜிவ் காந்தி வீட்டு வசதி வாரியம் சார்பில் வீடுகள் ஒதுக்க, முதல்வர் சித்தராமையான தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவு செய்தது.
இதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். 'ஆக்கிரமிப்பு நிலத்தில் வசித்தவர்களில் பெரும்பாலானவர்கள் வங்கதேசத்தினர்; அவர்களுக்கு எப்படி, கர்நாடகாவில் வீடு வழங்க முடியும்' என்று கேள்வியும் எழுப்பினர்.
இருப்பினும், வீடுகளை இழந்தோருக்கு மாற்று வீடுகள் கொடுப்பதற்காக, ஆவணங்களை சரிபார்க்கும் பணி நடந்தது. அப்போது, 'தங்களிடம் இரண்டு லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கிக்கொண்டு, இங்கு வீடுகள் கட்ட சிலர் அனுமதித்தனர்' என்று பல குடும்பத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
இதுபற்றி, பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவன அதிகாரிகள் விசாரித்த போது, காங்கிரஸ் பிரமுகர் வாசிம் உல்லா பெய்க், உள்ளூர் தலைவர்களான விஜய், முனி அஞ்சினப்பா, ராபின் ஆகியோர், பணம் வாங்கி கொண்டு, அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்ட உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த எலஹங்கா போலீசார், விஜய், வாசிம் உல்லா பெய்க் ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
இந்தப் பிரச்னையால், வீடுகளை இழந்தவர்களுக்கு மாநில அரசு சார்பில் வீடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அத்துடன், வீடு கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் யார் யார், அவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களா என, மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தினரும், போலீசாரும் இணைந்து, இப்பணியை மேற்கொண்டனர். ஆய்வில், ஆக்கிரமிப்பு இடத்தில் வசித்த, 167 குடும்பங்களில், 25 குடும்பங்கள் மட்டுமே, மாநில அரசு வழங்கும் வீடுகளை பெற தகுதியானவர்கள் என்று அடையாளம் காணப்பட்டது.
அதேநேரத்தில், மற்றவர்கள் எல்லாம் எங்கிருந்து வந்தனர் என்பதை கண்டறியும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
அவர்களின் அடையாள ஆவணங்கள் எல்லாம் உண்மையானவையா என்றும் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணையால் வீடு கேட்டு போராட்டம் நடத்தியவர்களில் பெரும்பாலானவர்கள், இரவோடு இரவாக காலி செய்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர்கள் எல்லாம், எதிர்க்கட்சியினர் கூறியபடி, வங்கதேசத்தவர்கள் தானா என்ற ரீதியிலும் விசாரணை நடக்கிறது.
இதுகுறித்து போலீசாரிடம் விசாரித்தபோது, அவர்கள் கூறியதாவது:
அரசின் உத்தரவுப்படி வீடு கேட்டு விண்ணப்பித்தவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன், 'சட்டப்படியே நாங்கள் இங்கு குடியிருந்தோம். எங்களிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளன' என்று பலர் கூறி வந்தனர்.
நாங்கள் ஆய்வு செய்வதை அறிந்ததும், கூடாரம் அமைத்து தங்கியிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள், இரவோடு இரவாக அந்த இடத்தை காலி செய்துள்ளனர். தற்போதுள்ள சிலரும் விரைவில் வேறு இடத்திற்கு ஓடி விட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

