ADDED : ஜூலை 03, 2026 10:25 PM

பெங்களூரு: வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக, தன் மீது லோக் ஆயுக்தா பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய கோரி, பா.ஜ.,வை சேர்ந்த, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, அவரது மகன் காந்தேஷ் மற்றும் மருமகள் ஷாலினி ஆகியோர், வருமானத்துக்கு அதிகமான சொத்துகள் குவித்துள்ளதாக, ஷிவமொக்காவை சேர்ந்த வக்கீல் வினோத் என்பவர், லோக் ஆயுக்தாவில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக, விசாரணை நடத்திய லோக் ஆயுக்தா போலீசார், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை என, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இது குறித்து, கேள்வி எழுப்பி வினோத், லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், மறு விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. இதன்படி, லோக் ஆயுக்தா போலீசார், புதிதாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.
தன் மீது லோக் ஆயுக்தாவில் பதிவு செய்த வழக்கை, ரத்து செய்யக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஈஸ்வரப்பா மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.
ஈஸ்வரப்பா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அசோக் ஹாரனஹள்ளி, ''வழக்கு தொடர்பாக, மனுதாரரை கைது செய்ய கூடாது என, லோக் ஆயுக்தாவினருக்கு உத்தரவிட வேண்டும்,'' என, வேண்டுகோள் விடுத்தார்.
லோக் ஆயுக்தா தரப்பில் வாதிட்ட வக்கீல் வெங்கடேஷு அரபட்டி, ''மனுதாரர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தால், அவர் மீது பலவந்தமாக நடவடிக்கை எடுக்கப்படாது,'' என்றார்.
வாத, பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிபதி நாகபிரசன்னா, ''இந்த கட்டத்தில் வழக்கு விசாரணையில், உயர் நீதிமன்றம் தலையிட முடியாது,'' என, கருத்து தெரிவித்து ஈஸ்வரப்பாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.
