ஓராண்டு கடந்தும் பஹல்காம் துயரத்தால் வருந்தும் குடும்பங்கள்
ஓராண்டு கடந்தும் பஹல்காம் துயரத்தால் வருந்தும் குடும்பங்கள்
ADDED : ஏப் 22, 2026 01:46 AM

ஷிவமொக்கா: பஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணியரை சுட்டுக் கொன்று ஓராண்டு கடந்த நிலையிலும், அந்தத் துயரம் தங்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருப்பதாக அவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி, பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணியர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில், கர்நாடகாவை சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரியான பரத் பூஷன், ஷிவமொக்காவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் ராவ், 47, ஆகிய இருவரும் அடங்குவர். இவர்கள் இருவரும் தங்கள் மனைவி, மகன் கண் முன்னே பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வேதனை நினைவுகள் அவர்களின் குடும்பத்தினரைப் பொறுத்தவரை, அந்தத் தாக்குதல் குறித்த வே தனை நிறைந்த நினைவுகள் இன்றும் அவர்களை விட்டு அகலாமல் தொடர்கின்றன. தன் மனைவி பல்லவி, மகனுடன் ராவ் காஷ்மீருக்கு மேற்கொண்ட முதல் பயணமாகவே பஹல்காமுக்குச் சென்றிருந்தார். அவர்கள் ஏப்ரல் 24ம் தேதி ஊர் திரும்பத் திட்டமிட்டிருந்தனர்.
அந்தத் துயரம் குறித்து ராவின் உறவினர் ரவி கிரண் கூறியதாவது:
ராவின் மனைவி மற்றும் குடும்பத்தினரால் எதையும் மறக்கவே முடியவில்லை. அந்த நிகழ்வு அவர்களின் மனதில் அப்படியே பதிந்திருக்கிறது. ஆனால் வாழ்க்கை தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அந்தத் துயரத்தைச் சமாளித்துக்கொண்டு வாழ்க்கையை எதிர்கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. இது குறித்துப் பேசவே அவரது மனைவி விரும்பவில்லை... சொல்வதற்கு அங்கே என்ன இருக்கிறது? வாழ்க்கை தொடர்ந்து செல்லத்தானே வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இத்தாக்குதலில் பலியான மற்றொருவர், பெங்களூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர் பரத் பூஷன், 41, ஆவார்; இவரும் தனது மனைவி டாக்டர் சுஜாதா, மூன்று வயது ஆண் குழந்தையுடன் பஹல்காமுக்குச் சுற்றுலா சென்றிருந்தார்.
பரத் பூஷனின் குடும்பத்தினர் அளித்த தகவலின்படி, தன் கணவர் உயிரிழந்து விட்டார் என்பதை உணர்ந்த உடனயே, சுஜாதா தனது கணவரின் அடையாள அட்டைகளை எடுத்துக்கொண்டு, தனது மகனுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பேச மறுப்பு பெங்களூரின் மத்திகெரே பகுதியில் அமைந்துள்ள பரத் பூஷனின் இல்லத்திற்கு நேற்று செய்தியாளர்கள் நேரில் சென்றபோது, பரத் பூஷனின் தந்தை வி. சென்னவீரப்பா இச்சம்பவம் குறித்துப் பேச மறுத்துவிட்டார்.
''நாங்கள் மிகுந்த வேதனையில் இருக்கிறோம். இது குறித்துப் பேச நான் விரும்பவில்லை. எனது மனைவியும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளோம்,'' என, அவர் கூறினார்.
