'எம்.எல்.ஏ., மனைவி குறித்து ஆபாசமாக பதிவிட்டவர் குடும்ப உறுப்பினரே'
'எம்.எல்.ஏ., மனைவி குறித்து ஆபாசமாக பதிவிட்டவர் குடும்ப உறுப்பினரே'
ADDED : ஜூலை 15, 2026 11:47 PM
மைசூரு: 'ம.ஜ. த., - எம்.எல்.ஏ.,வின் மனைவி குறித்து, சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக கருத்து தெரிவித்தவர் குடும்ப உறுப்பினரே' என, போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.
ம.ஜ.த., மூத்த தலைவரான ஜி.டி.தேவகவுடாவின் மகன் ஹுன்சூரு தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஹரிஷ் கவுடா. இவரது மனைவி வர்ஷா. இவரது தனிப்பட்ட படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றி, ஆபாசமான கருத்துகளை மர்ம நபர்கள் பதிவிட்டனர்.
இதனால், மனமுடைந்த வர்ஷா, கடந்த மாதம் 30ம் தேதி, மைசூரு சைபர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து, சைபர் போலீசார் விசாரித்தனர்.விசாரணையில், அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, சமூக வலைத்தளத்தில் வர்ஷாவின் படங்களை பதிவேற்றி, ஆபாசமான கருத்து தெரிவித்தது, தேவகவுடாவின் குடும்பத்தை சேர்ந்தவரே என்பது தெரிய வந்துள்ளது.
ஜி.டி.தேவகவுடாவின் மூத்த மருமகனும், வர்ஷாவுக்கு அண்ணன் முறையுமான விஸ்வேஸ்வரையா தான் அது என்பது கண்டறியப்பட்டது.
அவர் சமூகவலைதளத்தில் போலி கணக்கு உருவாக்கி, ஆபாச கருத்துகளை தெரிவித்து வந்துள்ளார்.
இதையறிந்த போலீசார் அவரை கைது செய்ய முயற்சித்தனர். இதற்கிடையே, அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
