'ஜெஸ்காம்' அலுவலகத்துக்கு தீ மின்சாரத்தை துண்டித்ததால் விவசாயி கோபம்
'ஜெஸ்காம்' அலுவலகத்துக்கு தீ மின்சாரத்தை துண்டித்ததால் விவசாயி கோபம்
ADDED : ஜூன் 25, 2026 10:40 PM
ராய்ச்சூர்: மின் கட்டணம் பாக்கி வைத்ததால், மின் இணைப்பை துண்டித்த 'ஜெஸ்காம்' எனும் குல்பர்கா மின் வினியோக நிறுவனத்துக்கு தீவைத்த விவசாயி, ஊழியர்களையும் தாக்கினார்.
ராய்ச்சூர் மாவட்டம், சிரவாரா தாலுகாவின், ஹள்ளி ஹோசூரு கிராமத்தில் வசிப்பவர் விவசாயி சிவப்பா பசன்னகவுடா கடிகி.
இவர், 11,000 ரூபாய் மின் கட்டணம் பாக்கி வைத்திருந்தார். பில் செலுத்தும்படி வலியுறுத்தி, ஜெஸ்காம் ஊழியர்கள், பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், விவசாயி பொருட்படுத்தவில்லை.
எனவே, அவரின் விவசாய மின் இணைப்பை துண்டிக்கும்படி, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்படி ஊழியர்கள், மின் இணைப்பை துண்டித்தனர்.
இதனால் கோபமடைந்த விவசாயி சிவப்பா, நேற்று முன் தினம் கிராமத்தில் இருந்த, ஜெஸ்காம் அலுவலகத்தில் நுழைந்து, ஊழியர்களை பயங்கரமாக தாக்கினார்.
தாக்குதலுக்கு பயந்து ஊழியர்கள், தப்பி வெளியே ஓடி வந்தனர். அவர்கள் வெளியே சென்றதும், சிவப்பா பெட்ரோல் ஊற்றி, அலுவலகத்துக்கு தீ வைத்தார். இதில் ஆவணங்கள், பணம், கம்ப்யூட்டர், லேப் உட்பட பல பொருட்கள் தீக்கிரையாகின.
இவரது செயலால், லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக ஊழியர்களுக்கு அபாயம் ஏதும் ஏற்படவில்லை. தகவலறிந்து அங்கு வந்தபோலீசார், சிவப்பாவை கைது செய்து, அழைத்து சென்றனர்.
அவரிடம் விசாரணை நடத்துகின்றனர்.
