/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முள்ளங்கியுடன் வந்த விவசாயி
/
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முள்ளங்கியுடன் வந்த விவசாயி
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முள்ளங்கியுடன் வந்த விவசாயி
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முள்ளங்கியுடன் வந்த விவசாயி
ADDED : பிப் 06, 2026 05:48 AM

துமகூரு: தன் தோட்டத்துக்கு செல்ல வழி ஏற்படுத்தி தரும்படி மன்றாடியும், லஞ்சம் கேட்டு அலைய வைத்த வருவாய் துறை அதிகாரிகளின் செயலால் கோபமடைந்த விவசாயி, தான் விளைவித்த முள்ளங்கிகளை லஞ்சமாக கொண்டு வந்தார்.
துமகூரு மாவட்டம், மதுகிரி தாலுகா, தொட்டரி ஜக்கனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் விவசாயி பிரசன்னகுமார், 58. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில், காய்கறிகள் பயிரிட்டு வாழ்க்கை நடத்துகிறார்.
நிலத்துக்கு செல்ல சரியான பாதை இல்லை. அதனால், உற்பத்தி செய்த பொருட்களை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல தொந்தரவாக உள்ளது. அதனால், தனது தோட்டத்திற்கு பாதை ஏற்படுத்தி தரும்படி, இரண்டு ஆண்டுகளுக்கு முன், தாலுகா நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
இவரது வேண்டுகோளை, வருவாய்த்துறை அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. இதுகுறித்து, லோக் ஆயுக்தாவில், விவசாயி பிரசன்னகுமார் புகார் அளித்தார்.
லோக் ஆயுக்தாவினரும் விவசாயின் நிலத்துக்கு வழி ஏற்படுத்தி தரும்படி உத்தரவிட்டனர். அந்த உத்தரவையும், வருவாய்த்துறை அதிகாரிகளோ, கிராம கணக்காளரோ கண்டு கொள்ளவில்லை.
அதிகாரிகளின் அலுவலகத்திற்கு பல முறை சென்றும் பயனில்லை. அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த விவசாயி, தன் நிலத்தில் விளைவித்த முள்ளங்கிகளுடன், நேற்று காலை தாலுகா அலுவலகத்துக்கு வந்தார்.
அலுவலகம் முன் நின்று கொண்டு, கையில் மைக் பிடித்து கொண்டு, 'அதிகாரிகளுக்கு கொடுக்க, என்னிடம் பணம் இல்லை. நான் விளைவித்த முள்ளங்கிகளையே லஞ்சமாக கொடுக்கிறேன். வாருங்கள், வாருங்கள்' என்று கோஷமிட்டார்.
இதன் மூலம் அதிகாரிகள் மீதான அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

