ADDED : அக் 18, 2025 04:44 AM
மைசூரு: படகலபுரா கிராமத்தில் புலி தாக்கியதில், விவசாயி காயமடைந்தார். புலி நடமாட்டத்தால், கிராமத்தினர் பீதி அடைந்துள்ளனர்.
மைசூரு நகரின், படகலா கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மஹதேவ், 50. இவர் நேற்று முன் தினம் மதியம், தோட்டத்தில் பருத்தி பறித்துக் கொண்டிருந்தார். அப்போது பாய்ந்து வந்த புலி, அவரை தாக்கியது. இதில் முகம், கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு வந்த வனத்துறை அதிகாரி சதீஷ், காயமடைந்த விவசாயியை தன் காரிலேயே அழைத்துச் சென்று, தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.
பண்டிப்பூர் புலிகள் சரணாலயத்தின், நுகு வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் ஒரு வாரமாக புலி நடமாடி வருகிறது. இதை பிடிக்கும்படி கிராமத்தினர் வலியுறுத்தினர். கும்கி யானைகள், அபிமன்யு, பகீரதா உதவியுடன் புலியை பிடிக்க வனத்துறையினர் முயற்சித்தனர். கூண்டும் வைத்துள்ளனர்.
புலியை வனத்துறையினர் தேடும்போது, படகலா கிராமத்தின், போளகவுடனகட்டே ஏரி அருகில் உள்ள புதரில் பதுங்கியிருப்பது தெரிந்தது.
யானைகளை கண்டு பீதியடைந்த புலி, புதரில் இருந்து வெளியேறி காட்டுக்குள் ஓடும்போது, தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மஹதேவை கடித்து, காயப்படுத்திவிட்டு ஓடிவிட்டது.
'புலி நடமாட்டம் இருப்பதால், கிராமத்தினர் தனியாக நடமாட வேண்டாம், இரவில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். சிறு பிள்ளைகள், வளர்ப்பு பிராணிகளை வெளியே விட கூடாது' என, வனத்துறையினர் எச்சரித்தனர்.