ADDED : ஏப் 15, 2026 03:38 AM

விஜயபுரா: தன்னை போன்று இல்லை என்ற கோபத்தில், 6 வயது மகனை ஆற்றில் தள்ளி கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.
விஜயபுரா மாவட்டத்தின் நாகடானா கிராமத்தில் வசிப்பவர் மல்லிகார்ஜுன் அரகேரி, 37. இவரது மனைவி பாக்யஸ்ரீ, 30. தம்பதிக்கு சித்தார்த், 6, என்ற மகன் இருந்தார். சித்தார்த் அழகான தோற்றம் கொண்டிருந்தார். 'உன் மகன் உன்னை போன்று இல்லை' என, சிலர் அவ்வப்போது வேடிக்கையாக கிண்டல் செய்தனர். இது, மல்லிகார்ஜுனனை கோபப்படுத்தியது.
மகன் தன்னை போன்று இல்லை. இவர் தனக்கு பிறக்கவில்லை என, சந்தேகமடைந்தார். இதனால் தம்பதி இடையே, தினமும் வாக்குவாதம் நடந்தது.
மார்ச் 16ம் தேதியன்று, மகனை பள்ளியில் சேர்ப்பதாக கூறி, மல்லிகார்ஜுன் அழைத்து சென்றார். மஹாராஷ்டிராவின், கராட் மாவட்டத்தின், வடோலிக்கு அழைத்து வந்து, அங்கு பாயும் கிருஷ்ணா ஆற்றில் மகனை தள்ளி கொலை செய்தார்.
அதன்பின் வீட்டுக்கு வந்து, மகனை பள்ளியில் சேர்த்து, ஹாஸ்டலில் விட்டுள்ளதாக, மனைவியிடமும், குடும்பத்தினரிடமும் கூறி நாடகமாடினார். ஏப்ரல் 1ம் தேதி, மகன் சித்தார்த்தின் பிறந்த நாள் என்பதால், மகனை பார்த்தே ஆக வேண்டும்.
ஹாஸ்டலில் இருந்து அழைத்து வரும்படி, பாக்யஸ்ரீ பிடிவாதம் பிடித்தார். இதனால் வெலவெலத்த மல்லிகார்ஜுன், பதில் சொல்ல முடியாமல் வீட்டில் இருந்து தலைமறைவானார்.
இதனால் சந்தேகமடைந்த பாக்யஸ்ரீ, விஜயபுரா ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மல்லிகார்ஜுனனை கண்டுபிடித்து விசாரித்த போது மகனை ஆற்றில் வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்திருப்பதால், அம்மாநில போலீசாரும் இவரிடம் விசாரிக்கின்றனர்.
இதற்கிடையில், மார்ச் 18ம் தேதி, ஆற்றில் அடையாளம் தெரியாத சிறுவனின் உடல் மிதந்தது. சிறுவனின் உடலை மீட்டு, போலீசார் விசாரித்து வந்த நிலையில், அவரே தந்தையால் கொலை செய்யப்பட்ட சித்தார்த் என்பது தெரிந்தது. 'மல்லிகார்ஜுனை கடுமையாக தண்டிக்க வேண்டும்' என, கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.
