/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சங்கிலி தொடர் விபத்தில் தந்தை, மகள் பலி
/
சங்கிலி தொடர் விபத்தில் தந்தை, மகள் பலி
ADDED : செப் 14, 2025 04:20 AM

காமாட்சிபாளையா: பெங்களூரில் ஆட்டோ, கார் மீது லாரி மோதிய சங்கிலி தொடர் விபத்தில், தந்தை, மகள் இறந்தனர்.
பெங்களூரு, மாகடி ரோடு சிக்ககொல்லரஹட்டியில் வசித்தவர் இயேசு, 45; ஆட்டோ டிரைவர். இவரது மகள் மரிய ஜெனிபர், 22. இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, திருமண நிச்சயம் நடந்தது. அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது.
கிறிஸ்தவ முறைப்படி திருமணத்திற்கு முந்தைய பிரார்த்தனை செய்ய, நேற்று காலை வீட்டில் இருந்து இயேசுவும், ஜெனிபரும் ஆட்டோவில் காமாட்சிபாளையாவுக்கு சென்றனர். சும்மனஹள்ளி சந்திப்பு பகுதியில் ஆட்டோ சென்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த லாரி, ஆட்டோ, அதன் பின்புறம் வந்த கார் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்துகளில் ஆட்டோ முற்றிலும் உருக்குலைந்தது. ஆட்டோவின் இடிபாடுகளில் சிக்கி தந்தை, மகள் உயிரிழந்தனர்.
காரில் பயணம் செய்த விஜய், அவரது கர்ப்பிணி மனைவி, மூன்று வயது குழந்தை காயத்துடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்த காமாட்சிபாளையா போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். விபத்து நேர்ந்ததும் லாரியை விட்டுவிட்டு ஓட்டுநர் ஓட்டம் பிடித்தார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காமாட்சிபாளையா - மாகடி ரோட்டில் உள்ள தொழிற்பேட்டையில் இருந்து லாரி வந்தபோது, இறக்கமான சாலையில் வேகமாக வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்தது தெரிய வந்தது. பிரேக் பிடிக்காததலா அல்லது 'ஸ்டியரிங் ராடு' முறிந்ததா என்றும் விசாரணை நடக்கிறது.