ADDED : பிப் 12, 2026 05:42 AM
ஆர்.டி.நகர்: மரு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், மகனிடம் கூறினால் கொன்று விடுவேன் என்று மிரட்டிய, மாமனார் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு ஆர்.டி.நகரில் வசிப்பவர், 70 வயது முதியவர்; தனியார் பள்ளியின் உரிமையாளர்.
இவர் நடத்தும் பள்ளியில், இவரது, 45 வயது மருமகள் முதல்வராக உள்ளார். 2020ம் ஆண்டில் இருந்து, வீடு, பள்ளியில் மருமகள் தனியாக இருக்கும் போது, மாமனார் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
மருமகளின் அழகை வர்ணித்து கடிதம் எழுதியதுடன், அதை மருமகள் முன் ஆபாசமாகவும் படித்துக் காட்டியுள்ளார்.
இதுபற்றி கணவரிடம் கூறினால், 'உன்னையும், உன் பிள்ளைகளையும் கொன்று விடுவேன்' என்றும் மிரட்டி இருக்கிறார்.
இதனால், மருமகள் வெளியே சொல்லாமல் இருந்து உள்ளார். ஆனாலும், மாமனாரின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால், கடந்த மாதம் தன் கணவரிடம் கூறினார்.
தந்தையை, மகன் எச்சரித்தார். ஆனாலும், முதியவர், மருமகளை விடவில்லை.
வேறு வழியின்றி கடந்த 7ம் தேதி, ஆர்.டி.நகர் போலீசில் மாமனார் மீது மருமகள் புகார் செய்தார்.
முதியவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், அவருக்கு ஜாமின் கிடைத்தது. இந்த தகவல் தாமதமாக நேற்று வெளியானது.

