ADDED : மே 18, 2026 11:20 PM
சித்ரதுர்கா: 'செல்பி' ஆசையால் மகனுடன் கால்வாயில் இறங்கிய தந்தை, நீரில் மூழ்கினார். தந்தை காப்பாற்றப்பட்டார். மகன் நீரில் அடித்து செல்லப்பட்டார்.
சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் தாலுகாவின் ஆதிவாலா கிராமத்தில் வசிப்பவர் ஜாபர் சாதிக், 30. இவர் பெயின்டராக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் ஞாயிறு விடுமுறை என்பதால், தன் 4 வயது மகன் சமீருடன், மதியம் ஹிரியூரில் உள்ள வாணி விலாஸ் கால்வாய்க்கு வந்திருந்தார்.
மகனை கையில் துாக்கி வைத்து கொண்டு, கால்வாய் கரையில் நின்று தன் மொபைல் போனில் செல்பி எடுக்க முற்பட்டார். அப்போது கால் தவறி, நீரில் விழுந்தார். விழுந்த அதிர்ச்சியில் கையில் இருந்த மகனை, தவற விட்டுவிட்டார். தந்தையும், மகனும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதை கவனித்த அப்பகுதியினர், நீரில் குதித்து ஜாபர் சாதிக்கை காப்பாற்றினர். ஆனால் குழந்தை நீரில் அடித்து செல்லப்பட்டது.
இது குறித்து, தகவலறிந்து அங்கு வந்த ஹிரியூர் ஊரக போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன், கால்வாயில் சிறுவன் சமீரின் உடலை தேடினர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து, சிறிது தொலைவில் சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
கால்வாயில் விழுந்ததில், காயமடைந்த ஜாபர் சாதிக், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெறுகிறார். ஹிரியூர் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
