/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தனியார் பள்ளி பஸ்சின் பெண் நடத்துநர் கொலை
/
தனியார் பள்ளி பஸ்சின் பெண் நடத்துநர் கொலை
ADDED : ஏப் 17, 2025 01:35 AM
சித்ரதுர்கா: சித்ரதுர்கா மாவட்டம், ஹொளல்கெரே தாலுகாவின், ராமகட்டா கிராமத்தில் வசித்தவர் ஆஷா, 28. இவர் ஹொளல்கெரேவில் உள்ள சினேஹா பப்ளிக் பள்ளி பஸ்சில் நடத்துநராக பணியாற்றினார். நான்கு ஆண்டுகளுக்கு முன், இவருக்கு திருமணம் நடந்தது. இவரது கணவர் காலமானதால், தன் தாயுடன் ஆஷா வசித்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் காலை, போனில் பேசியபடி வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் திரும்பவில்லை. மகளை காணாமல் தாயார் தேடினார். இந்நிலையில் ராமகட்டா மற்றும் கெங்குன்டே கிராமங்களின் இடையில் உள்ள வயலில், அவர் கொலையாகி கிடந்தார். தலையில் பாறாங்கல் போட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதை கண்ட சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், ஆஷாவின் உடலை மீட்டு விசாரணையை துவக்கினர். முதற்கட்ட விசாரணையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, போலீசார் சந்தேக்கின்றனர்.
ஆஷாவுக்கும், கொடகவள்ளிஹட்டி கிராமத்தின் அனிலாசஸ், 30, என்பவருக்கும் நட்பு இருந்ததாக கூறப்படுகிறது. இவர் ஆஷாவிடம் 56,000 ரூபாய் கடன் பெற்றிருந்தார். நீண்ட நாட்களாகியும் அதை திருப்பி தராமல் இழுத்தடித்தார். இதே விஷயமாக இருவருக்கும், பல முறை வாக்குவாதம் நடந்துள்ளது.
கடனை திருப்பி தருவதாக கூறி, கெங்குன்டே வனப்பகுதிக்கு ஆஷாவை வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்து, தலையில் கல்லை போட்டு கொலை செய்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
எனவே அனிலாசசை தீவிரமாக விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் கிராமத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளியை கடுமையாக தண்டிக்கும்படி வலியுறுத்தி உள்ளனர்.