பொதுநல மனு தாக்கல் செய்தோருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
பொதுநல மனு தாக்கல் செய்தோருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
பொதுநல மனு தாக்கல் செய்தோருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
பொதுநல மனு தாக்கல் செய்தோருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
ADDED : ஏப் 11, 2026 04:23 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: கர்நாடகாவில், 10ம் வகுப்பில், மூன்றாவது மொழியான ஹிந்தி மொழிக்கு மதிப்பெண்ணுக்கு பதிலாக, தரமதிப்பீடு வழங்கும் அரசின் திட்டம் குறித்து, பொதுநல மனு தாக்கல் செய்தவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரை சேர்ந்த சந்தனா, வெங்கடேஷ் ஆகியோர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு:
பத்தாம் வகுப்பு தேர்வு நடந்த மார்ச், 31ம் தேதியன்று பேசிய கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா, 'ஹிந்தி உட்பட மூன்றாம் மொழிகள் கட்டாயமில்லை. மூன்றாவது மொழித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மதிப்பெண்ணுக்கு பதிலாக, தர மதிப்பீடு வழங்கப்படும்.
' நடப்பு கல்வியாண்டில் இருந்தே இரு மொழி கொள்கை அமல்படுத்தப்படும்' என்றார். இருப்பினும், இது தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அரசாணையோ அல்லது அறிவிப்போ வெளியிடவில்லை.
அமைச்சரின் இம்முடிவுக்கு பொது மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அத்துடன், அரசியலமைப்பின், 14வது பிரிவின் கீழ் உள்ள சமத்துவ உரிமையை மீறும் செயலாகும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இம்மனு தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி பூனாச்சா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நடந்த வாதம்:
நீதிபதிகள்: 10ம் வகுப்பு தேர்வில் மூன்றாம் மொழிகளுக்கு மதிப்பெண்ணுக்கு பதிலாக, தரமதிப்பீடுகள் வழங்கும் முறை குறித்து, கல்வி அமைச்சர் தெரிவித்த அறிக்கை தொடர்பாக பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையில், மனுதாரர்கள் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அவர்களின் இச்செயல் சரியல்ல. இத்தகைய பத்திரிகை அறிக்கைகளை ரத்து செய்ய உயர் நீதிமன்றம், தன் சிறப்பு அதிகார வரம்பை பயன்படுத்த வேண்டியிருக்கும்.
மேலும், இது விளம்பர நோக்கங்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட மனு. எனவே, மனுதாரர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை, கர்நாடக மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் செலுத்த வேண்டும். அபராத தொகை செலுத்த தவறினால், அது நில வருவாய் பாக்கியாக கருதப்பட்டு வசூலிக்கப்படும்.
இந்த கட்டத்தில், மனுதாரர் தரப்பு வக்கீல், 'ஹிந்தி மொழியை கைவிடப்பட்டது கவலை அளிக்கிற' என்றார்.
நீதிபதிகள்: பத்திரிகை அறிக்கையில் மூன்று வார்த்தைகள் மட்டுமே உள்ளன. ஹிந்தி மொழி கைவிடப்பட்டது குறித்து அந்த அறிக்கையில் எந்த குறிப்பும் இல்லை. எனவே, மனுதாரர்களுக்கு அபராத தொகை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது.


