ADDED : ஜூலை 01, 2026 08:25 AM

சிக்கபல்லாபூர்: நந்தினி பாலகத்தில் தீப்பிடித்து எரிந்ததை பார்த்த உரிமையாளர், அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சிக்கபல்லாபூர் நகரின் கனஜேனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் வெங்கடேஷ், 55.
இவர் பல ஆண்டுகளாக, சிக்கபல்லாபூர் நகரின் கால்நடைத்துறை அலுவலகம் அருகில், நந்தினி மில்க் பார்லர் என்ற பெயரில் பாலகம் வைத்து நடத்துகிறார்.
நேற்று முன் தினம் இரவு 11:00 மணிக்கு, எதிர்பாராமல் அந்த இடத்தில் தீப்பிடித்தது. இதை பார்த்த அப்பகுதியினர், உரிமையாளர் வெங்கடேஷுக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த அவர், அப்பகுதியினர் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தினார். இந்த விபத்தால் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதே அதிர்ச்சியால், கடை முன் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
நந்தினி பாலகத்தில் தீப்பிடிக்க என்ன காரணம் என சிக்கபல்லாபூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
