ADDED : ஜூலை 01, 2026 08:24 AM

பெங்களூரு: முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்த பின், சித்தராமையாவை ஓரங்கட்ட, காங்கிரசில் முயற்சி நடப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
ம.ஜ.த.,வில் இருந்த சித்தராமையா, கடந்த, 2006ல், அக்கட்சியை விட்டு விலகி, காங்கிரசில் சேர்ந்தார். கட்சியில் அவருக்கு மளமளவென செல்வாக்கு வளர்ந்தது. 2008ல் எதிர்க்கட்சி தலைவரானார். 2013ல் முதல்வரானார். 2023ல் இரண்டாம் முறையாக முதல்வராக வாய்ப்பு கிடைத்தது. அதிக நாட்கள் முதல்வராக இருந்த, முதல் தலைவர் என்ற பெருமை பெற்றார். முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்சின் சாதனையை முறியடித்தார்.
அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்ததிலும், சாதனை செய்தவர். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு பிடித்தமான தலைவராக இருப்பவர். மேலிட அளவில் சித்தராமையாவுக்கு அதிக செல்வாக்கு இருந்தது. ஆனால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின், இவரை கட்சியில் இருந்தே ஓரம் கட்ட, முயற்சி நடப்பதாக தெரிகிறது.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின், சித்தராமையா ஓய்வுக்காக சில நாட்கள் கேரளாவுக்கு சென்றார். அங்கிருந்து திரும்பிய பின், பெங்களூரில் தங்கியுள்ளார். அரசு சார்பில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடந்தன.
ஆனால் இரண்டிலுமே, சித்தராமையா தென்படவில்லை. துங்கபத்ரா அணையில் புதிதாக மதகு ஷட்டர்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதன் திறப்பு விழா, ஜூன் 25ம் தேதியன்று நடந்தது.
இந்த விழாவில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என, மூன்று மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் உட்பட, பலர் பங்கேற்றனர். இந்த ஷட்டர்கள் பொருத்தியதில், சித்தராமையாவின் பங்களிப்பு அதிகம்.
அப்போது நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த சிவகுமாருக்கு, முழுமையான ஒத்துழைப்பு அளித்து, மதகு ஷட்டர்கள் பொருத்த காரணமாக இருந்தார். ஆனால் திறப்பு விழாவில் உரையாற்றிய யாரும், சித்தராமையாவின் பெயரை கூறவில்லை. இது ஆச்சர்யத்துக்கு காரணமானது.
கெம்பே கவுடா லே - அவுட்டில், புதிதாக அமைக்கப்பட்ட, எஸ்.எம்.கிருஷ்ணா சாலை, சில நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது. அதிலும் சித்தாரமையா தென்படவில்லை. கெம்பே கவுடா ஜெயந்தியை முன்னிட்டு, நடந்த நிகழ்ச்சிகளுக்காக மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், சிவகுமார், பரமேஸ்வர், கிருஷ்ண பைரேகவுடா, ஹாரிஸ், சோமசேகர் என, பலருக்கு உயரமான கட் - அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், சித்தராமையாவின் கட் அவுட் காணப்படவில்லை.
முதல்வர் பதவியை விட்டு தரும் வரை, சித்தராமையாவுடன், சிவகுமார் நெருக்கமாக இருந்தார். முதல்வரான பின், இவர் மாறி விட்டார் என, கூறப்படுகிறது. சித்தராமையாவை ஓரங்கட்ட காங்கிரசில் முயற்சி நடப்பதால், அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சித்தராமையாவுக்கு ஓட்டு வங்கி உள்ளது. அவரது மகன் அமைச்சராக இருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர், முதல்வர் என, பல முக்கிய பதவிகளை நிர்வகித்தவர். ஒரு காலத்தில் இவர் இல்லாவிட்டால், காங்கிரஸ் இல்லை என்ற சூழ்நிலை இருந்தது. இத்தகைய தலைவரை திடீரென ஒதுக்கி தள்ளுவது சரியல்ல என, பலரும் குமுறுகின்றனர்.
முதல்வர் சிவகுமாரின் அலுவலகம் மற்றும் இல்லத்துக்கு வரும் ஆதரவாளர்கள், எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதே நேரத்தில் சித்தராமையா இல்லத்துக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இது குறித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறியதாவது:
இது, வேகமாக ஓட வேண்டிய காலம். அதற்கு தக்கபடி நாமும் ஓட வேண்டும். ஒருவேளை ஓடாவிட்டால், ரயிலை தவற விட்டு விடுவோம்.அரசியலும் அப்படித்தான்ஒரு ரயில் தவறி விட்டால், மவுனமாக அமர்ந்திருக்க முடியாது. வேறு வாகனத்தில் சென்றாவது, ரயிலை பிடிக்க வேண்டும். ரயிலை பிடிக்காவிட்டால், மக்கள் நம்மை மறந்துவிடுவர்.
முன்னாள் முதல்வர் சித்தராமையா, மைசூரில் இருந்தும் அரசியல் செய்யலாம். அதில் தவறு இல்லை. ஆனால், மக்கள் தொடர்பு எதுவரை இருக்குமோ, அதுவரை மட்டுமே ஒருவர் தலைவராக நிலைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
