/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஷிவமொக்காவில் அமைகிறது விமான பயிற்சி மையம்
/
ஷிவமொக்காவில் அமைகிறது விமான பயிற்சி மையம்
ADDED : ஜூன் 02, 2025 10:21 PM

பெங்களூரு: ஷிவமொக்கா விமான நிலையத்தில், விமான பயிற்சி மையம் அமைக்க கர்நாடக அரசு திட்டம் வகுத்துள்ளது.
இதுதொடர்பாக, ஷிவமொக்கா விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
ஷிவமொக்கா விமான நிலையத்தை, கே.எஸ்.ஐ.ஐ.டி.சி., எனும் அரசு சார்ந்த தொழில் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு கார்ப்பரேஷன் நிர்வகிக்கிறது.
இங்கு, விமான பயிற்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, விமான நிலையத்தில் 3,500 சதுர அடி நிலம் அளிக்கப்படுகிறது.
இந்த நிலத்தில் விமானங்களை நிறுத்துவது, பயிற்சி அறை, அலுவலகங்கள் உட்பட மற்ற தேவைகளுக்கு பயன்படுத்தப்படும்.
இங்கு அமைக்கப்படும் தீ பாதுகாப்பு, ஆம்புலன்ஸ் வசதி, வான்வெளி கட்டுப்பாடு, ஓடுதள மேலாண்மை பொறுப்பை, கே.எஸ்.ஐ.ஐ.டி.சி., ஏற்கும்.
விமான பயிற்சி மையம் துவக்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் பெறும் நிறுவனம், விமான பயிற்சி மையத்தின் மின் கட்டணம், பாதுகாப்பு உட்பட மற்ற நிர்வகிப்பு செலவுகளை ஏற்க வேண்டும்.
ஆண்டுதோறும் 100 பேருக்கு விமானம் ஓட்டும் பயிற்சி அளிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிற்சி மையம் ஆரம்பமான முதலாவது ஆண்டில், 50 பேரும்; மூன்றாவது ஆண்டில் 100 பேரும் சேர்க்கப்படுவர்.
இவற்றில் 25 இடங்கள் கர்நாடகாவின் மாணவர்கள், பெண்களுக்கு ஒதுக்கப்படும். இவர்களுக்கு கட்டண சலுகை அளிக்க வேண்டும்.
ஒப்பந்த நிறுவனம், விமான பயிற்சிக்கு தேர்வு செய்வதற்கு முன்பு, கே.எஸ்.ஐ.ஐ.டி.சி.,யிடம் அனுமதி பெற வேண்டும்.
ஒப்பந்த நிறுவனம், ஆண்டுதோறும் சதுர மீட்டருக்கு 650 ரூபாய் வீதம், கே.எஸ்.ஐ.ஐ.டி.சி.,க்கு வாடகை செலுத்த வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, வாடகை உயர்த்தப்படும்.
விமான நிலையம் மற்றும் ரன்வே பயன்படுத்தும்போது, கே.எஸ்.ஐ.ஐ.டி.சி.,க்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.