10,000 ரூபாயை திருடியவரை துப்பறிந்து கண்டுபிடித்த பூ வியாபாரி
10,000 ரூபாயை திருடியவரை துப்பறிந்து கண்டுபிடித்த பூ வியாபாரி
ADDED : ஜூன் 20, 2026 11:00 PM
பெங்களூரு: பூ விற்கும் முதியவர், துப்பறிவாளனாக மாறி, தன் பணத்தை திருடியவரை கண்டுபிடித்து, போலீசாருக்கு தகவல் கூறி, ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.
பெங்களூரின், நந்தினி லே - அவுட்டின் இரண்டாவது பிளாக்கில் வசிப்பவர் ராஜண்ணா, 66. இவர் இப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேய சுவாமி கோவில் முன், தள்ளுவண்டியில் பூக்களை விற்கிறார்.
பூ வியாபாரத்தில் தேவைப்படும் சில்லரைக்காக, மாதம் ஒரு முறை, 10,000 ரூபாய் நோட்டுகளை, வங்கியில் கொடுத்து 10, 20 ரூபாயாக மாற்றி வாங்குவது.
முதியவர் தினமும் வியாபாரம் முடிந்த பின், வசூலாகும் சில்லரை பணத்தை, துணியால் மூட்டை கட்டி, தன் தள்ளுவண்டியின் கீழ் பகுதியில் வைத்து விட்டு, வீட்டுக்கு செல்வார். மறுநாள் வந்து அந்த பணத்தை எடுத்து வியாபாரத்தை துவக்குவார். நீண்ட காலமாக இது அவரது பழக்கம்.
முதியவர் ராஜண்ணா, மே 25ம் தேதியன்று காலை, கோவில் முன் வியாபாரத்தை துவக்கினார். தள்ளுவண்டியின் கீழ் பகுதியில் வைத்திருந்த சில்லரை மூட்டையை எடுத்த போது, கனம் குறைந்திருந்தது.
மூட்டையை பிரித்து எண்ணிய போது, 10,000 ரூபாய் சில்லரையில், 800 ரூபாய் குறைந்திருந்தது. 9,200 ரூபாய் இருந்தது. யாரோ மூட்டையை அவிழ்க்காமல், விரல்களை நுழைத்து சில்லரைகளை திருடியிருந்தார்.
குழப்பமடைந்த ராஜண்ணா, அன்று வியாபாரம் முடிந்த பின், 10,000 ரூபாய் சில்லரையை எண்ணி, அதே துணியில் கெட்டியாக மூட்டை கட்டி, தள்ளு வண்டியின் கீழ்ப்பகுதியில் வைத்து விட்டு, வீட்டுக்கு சென்றார்.
மறுநாள் காலை வியாபாரத்துக்கு வந்த போது, பணம் கட்டி வைத்திருந்த துணி கிழிந்து கிடந்தது. பணம் மொத்தமும் திருடு போயிருந்தது.
அதிர்ச்சி அடைந்த ராஜண்ணா, திரு டனை தானே துப்பறிந்து கண்டுபிடிக்க முடிவு செய்தார். கோவில் சுற்றுப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பரிசீலிக்க, அவற்றை பொருத்தியவர்களிடம் அனுமதி பெற்றார்.
இரவு நேரத்தில், தன் தள்ளு வண்டியை சுற்றி நடமாடியவர்களை கவனித்தார். அப்போது, அதே பகுதியில் வசிக்கும், ஜொல்லு என, அழைக்கப்படும் சரண் என்பவர், தள்ளுவண்டியில் உள்ள பணத்தை திருடியது தெரிந்தது.
அந்த தகவல்களுடன், நந்தினி லே - அவுட் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். புகார் அளிப்பதற்கு முன், முதியவர் செய்த துப்பறியும் வேலையை கண்டு, போலீசாரே ஆச்சர்யம் அடைந்து, பாராட்டினர். தலைமறைவாக உள்ள சரணை தேடி வருகின்றனர்.
