/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
லால்பாக் பூங்காவில் இன்று மலர் கண்காட்சி துவக்கம்
/
லால்பாக் பூங்காவில் இன்று மலர் கண்காட்சி துவக்கம்
லால்பாக் பூங்காவில் இன்று மலர் கண்காட்சி துவக்கம்
லால்பாக் பூங்காவில் இன்று மலர் கண்காட்சி துவக்கம்
ADDED : ஜன 14, 2026 03:42 AM

பெங்களூரு: குடியரசு தினத்தை முன்னிட்டு, பெங்களூரு லால்பாக்கில் இன்று, 219வது மலர் மற்றும் பழங்கள் கண்காட்சி துவங்குகிறது. வரும், 26ம் தேதி வரை நடக்கிறது.
நாட்டின், 77 வது குடியரசு தினத்தை ஒட்டி, தோட்டக்கலை துறை சார்பில், பெங்களூரு லால்பாக் கண்ணாடி மாளிகையில் நடக்கும் மலர் மற்றும் பழங்கள் கண்காட்சியை இன்று மாலை, 4:00 மணிக்கு முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார்.
தேஜஸ்வி விஸ்மயா இந்தாண்டு குவெம்புவின் மகனும், எழுத்தாளருமான கே.பி.பூர்ணசந்திரா தேஜஸ்வியின் வாழ்க்கை மற்றும் எழுத்துக்களை கொண்டு, 'தேஜஸ்வி விஸ்மயா' என்ற கருப்பொருள் அடிப்படையில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதில், பூர்ணசந்திரா தேஜஸ்வியின் நாவல்கள், கதைகளில் சுட்டிக்காட்டிய வனம் போன்று, 25 அடி உயரம், 45 அடி அகலத்தில் பெரியமலையும், நீர்வீழ்ச்சியும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
இதன் அடிவாரத்தில், தேஜஸ்வியின், 'நிருத்தரா' வீட்டின் மாதிரி, மலர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டின் முன், தேஜஸ்வியின் நான்கு அடி உயர சிலை அமைந்து உள்ளது. மலர்களால் வடிவமைக்கப்பட்ட தேஜஸ்வியின் ஸ்கூட்டர், வண்டு, விமான பட்டாம்பூச்சி போன்ற விலங்குகள், பறவைகள், பூச்சிகளும் இடம் பெறுகின்றன.
ரூ.3.20 கோடி செலவு மலையின் வலதுபுறம் அடிவாரத்தில், தேஜஸ்வியின் அறக்கட்டளையின் கட்டடத்தின் மாதிரி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக மொத்தம், 4.50 லட்சம் பூக்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. மலர் கண்காட்சிக்காக, 3.20 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஜன., 15 முதல் 26ம் தேதி வரை தினமும் மாலை, 5:00 முதல் இரவு 7:00 மணி வரை தேஜஸ்வியின் புகழ் பெற்ற நாடகங்கள், சினிமா, இலக்கியம் குறித்து கலந்துரையாடல் நடக்கிறது.
லால்பாக்கில் உள்ள கடைகளுக்கு அடுத்துள்ள புல்வெளியில், புத்தக கண்காட்சி, விற்பனையும் நடக்கிறது.
முதன் முறையாக சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகள் குறித்த இரண்டு பெரிய ஸ்டில் படங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. ஒரு பக்கம் யானையின் தலையும், மற்றொரு பக்கம் 'ஹார்ன்பில் பறவை'யும் இடம் பெறுகிறது.
இது தவிர, சிறிய வனவிலங்குகள், பறவைகள் உட்பட பல்வேறு விலங்குகள், பறவைகளின் நகரும் படங்கள், லால்பாக் முழுதும் வைக்கப்படுகிறது.
டபுள் ரோட்டில் உள்ள சாந்தி நகர் பஸ் நிலையம் அருகில் உள்ள பலமாடி கார் நிறுத்துமிடம், ஹாப்காம்ஸ் வளாகம், ஜே.சி., சாலையில் மாநகராட்சியின் பல மாடி கார் நிறுத்துமிடங்களிலும், இரு சக்கர வாகனங்களில் வருவோர், லால்பாக் பிரதான வாயில் அருகில் உள்ள அல் அமீன் கல்லுாரி வளாகத்தின் வாகன நிறுத்தும் இடங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

