எலஹங்கா விமானப்படை நிலம் கையகப்படுத்த வனத்துறை முடிவு
எலஹங்கா விமானப்படை நிலம் கையகப்படுத்த வனத்துறை முடிவு
ADDED : மே 03, 2026 11:32 PM

பெங்களூரு: பெங்களூரு எலஹங்காவில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில், விமானப்படை தளம் அமைந்துள்ளது. இந்த நிலத்தை கையகப்படுத்த வனத்துறை தயாராகி வருவதாக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே கூறி உள்ளதால், 'அடுத்தாண்டு விமான கண்காட்சி நடக்குமா?' என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.
பெங்களூரு எலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில், இந்திய விமானப்படையும், மத்திய அரசும் இணைந்து, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, சர்வதேச விமான கண்காட்சியை நடத்தி வருகிறது.
இந்த கண்காட்சி மூலம், பல்வேறு நாட்டின் விமானப்படை பலத்தை அறிய, பொது மக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
ஐந்து நாட்கள் நடக்கும் இக்கண்காட்சியை பார்க்க, நகரின் பல பகுதிகளில் இருந்தும் பொது மக்கள் வருகை தருகின்றனர். இந்நிகழ்ச்சி மூலம் முதலீடுகளால் வருவாய் கிடைக்கிறது.
இந்நிலையில் பெங்களூரில் வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே கூறியதாவது:
வனத்துறையில் உள்ள நில ஆவணங்கள்படி, தற்போது இந்திய விமானப்படை தளம் அமைந்துள்ள இடம், கன்டிகனஹள்ளி கிராமத்துக்கு உட்பட்ட 159 ஏக்கர் நிலத்தில் அமைந்து உள்ளது. இந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமானது. வன நிலம் எப்போதுமே வனத்துறைக்கு தான் சொந்தம். இந்த நிலம் திரும்ப பெறப்படும்.
இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் விமான கண்காட்சி அமைந்துள்ள நிலம், வனத்துறைக்கு சொந்தமானது. இந்த நிலத்தை விமானப்படையிடம் இருந்து திரும்ப பெற வனத்துறை தீர்மானித்து உள்ளது. வனப்பகுதியை பாதுகாத்து, மேம்படுத்துவது எங்களின் கடமை. ஒரு அங்குல வன நிலத்தையும் வீணாக்க விடமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
