/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காட்டு யானை தாக்கி 'மாஜி' கவுன்சிலர் பலி
/
காட்டு யானை தாக்கி 'மாஜி' கவுன்சிலர் பலி
ADDED : மார் 10, 2026 05:50 AM
குடகு: காட்டு யானை தாக்கியதில், கிராம பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலர் பலியானார். இச்சம்பவத்தால் கிராமத்தினர் கோபமடைந்தனர்.
குடகு மாவட்டம் குஷால் நகர் தாலுகா வால்னுார் கிராமத்தில் வசித்தவர் ஜலஜாக்ஷி, 53, இவர் நஞ்சராய பட்டணா கிராம பஞ்சாயத்தின் முன்னாள் கவுன்சிலர். இவர் நேற்று காலை வனப்பகுதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென எதிரே வந்த காட்டு யானை, தும்பிக்கையால் தாக்கி அவரை துாக்கி வீசியது. பலத்த காயமடைந்த ஜலஜாக்ஷி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இதைப்பார்த்த சிலர், வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். வனத்துறை அதிகாரி கோபால், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.
குடகு மாவட்டத்தில் காட்டு யானைகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அவ்வப்போது உயிரிழப்பும் நடக்கிறது. சில நாட்களுக்கு முன், மடிகேரி தாலுகாவின் பெட்டத்துார் கிராமத்தில் வசித்த பி.யு.சி., மாணவி பூஜா என்பவர், காட்டு யானை தாக்கி பலியானார். இச்சம்பவத்தை மறப்பதற்கு முன்பே, முன்னாள் கவுன்சிலர் ஜலஜாக்ஷியை, யானை தாக்கி கொன்ற சம்பவம் பீதியை கிளப்பியுள்ளது.
காட்டு யானைகளால் உயிரிழப்பு அதிகரிப்பதால், கிராமத்தினர் கோபம் அடைந்தனர். நேற்று போராட்டம் நடத்தி அதிகாரிகளை கண்டித்தனர். யானைகளின் தொல்லையை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்கவில்லை என, அதிருப்தி தெரிவித்தனர்.

