ADDED : ஏப் 07, 2025 04:54 AM
பெங்களூரு : போவி மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்த வழக்கில், முன்னாள் பொது மேலாளர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., ஆட்சியில் சமூக நலத்துறைக்கு உட்பட்ட போவி மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது 97 கோடி ரூபாயை 500 போலி வங்கி கணக்கில் வரவு வைத்தது தெரிந்தது. இதுகுறித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், சி.ஐ.டி., விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட, பெண் வக்கீலும், தொழில் அதிபருமான ஜீவா கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பெண் டி.எஸ்.பி., கனகலட்சுமி கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் முறைகேடு தொடர்பாக சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி பெங்களூரு வி.வி.டவரில் உள்ள போவி மேம்பாட்டு ஆணைய அலுவலகம் உட்பட 10 இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். இந்த சோதனையின் போது சில முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் சிக்கின.
இதன் அடிப்படையில் போவி மேம்பாட்டு ஆணைய முன்னாள் பொது மேலாளர் நாகராஜப்பா, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய, அமலாக்கத்துறை அதிகாரிகள் 14 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து, விசாரித்து வருகின்றனர்.
