எந்த பதவி மீதும் ஆசையில்லை கூறுகிறார் 'மாஜி' எம்.பி., சுரேஷ்
எந்த பதவி மீதும் ஆசையில்லை கூறுகிறார் 'மாஜி' எம்.பி., சுரேஷ்
ADDED : ஜூன் 14, 2026 11:32 PM

பெங்களூரு: யாரிடமும் கெட்டவன் என, பெயர் எடுக்காமல் இறுதி மூச்சை விட வேண்டும். இது தான் என் ஆசை. இதை தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை, என, காங்கிரஸ் முன்னாள் எம்.பி.,யும், முதல்வர் சிவகுமாரின் தம்பியுமான சுரேஷ் தெரிவித்தார்.
இது குறித்து, பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை. வீட்டில் ஒருவர் அரசியலில் இருக்கிறார். அதுவேபோதும். அவருடன் இருந்து, பணியாற்ற வேண்டும். இதற்கு பதவியில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
நான் எம்.பி.,யாக இருந்த போது, தொகுதி வளர்ச்சிக்காக அதிகாரிகளிடம், கடுமையாக நடந்து கொள்வது, கட்டாயமாக இருந்தது. பொதுமக்களுக்கு தேவையான பணிகள் நடக்க வேண்டுமானால், கடுமையாக தான் நடந்து கொள்ள வேண்டும்.
லோக்சபா தேர்தலில் நான் தோற்பேன் என, எதிர்பார்க்கவில்லை. புதியவர் களமிறங்கினார். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆரம்பத்தில் வருத்தம் இருந்தது. மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் பாக்கியுள்ளன.
மஞ்சுநாத்துக்கு மக்கள் ஒரு வாய்ப்பு அளித்துள்ளனர். என்னிடம் என்ன குறை கண்டனர் என தெரியவில்லை. அவர் எங்களை விட அதிகம் படித்தவர். மேலும் அதிகமாக பணியாற்ற, அவருக்கு வாய்ப்பு கிடைக்கட்டும்.
அடுத்த தேர்தலில் போட்டியிடுவது பற்றி, நான் ஆலோசிக்கவில்லை. என் அண்ணன் முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது நனவானது. அவர் நல்லாட்சி அளிக்க வேண்டும். யாரிடமும் கெட்டவன் என, பெயர் எடுக்காமல் இறுதி மூச்சை விட வேண்டும். இது தான் என் ஆசை. இதை தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை.
நான் இருக்கும் வரை, நேர்மையாக பணியாற்ற வேண்டும். எந்த பதவியிலும் எனக்கு விருப்பம் இல்லை. இறைவன் எனக்கு அனைத்தும் கொடுத்துள்ளார். எனக்கு எந்த நோயும் இல்லை. சிவகுமார் இந்த நாட்டின் பணக்கார முதல்வராக இருக்கலாம். வாழ்க்கையின் அனைத்து கோணங்களையும், அவர் பார்த்துள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்வார்.
இந்தியாவில் கர்நாடகா நல்ல பெயரை எடுத்துள்ளது. அடுத்த முறையும், காங்கிரசை ஆட்சியில் அமர்த்த வேண்டும். அதுவே எங்களின் குறிக்கோள்.
கட்சி மேலிடத்தின் உத்தரவுபடி, சிவகுமார் முதல் வராக சித்தராமையா வாய்ப்பளித்தார். சித்தராமையா தலைமையில், நாங்கள் பணியாற்றுவோம்.
இவரை முன்னாள் முதல் வர் என, கூறுவது எனக்கு கஷ்டமாக உள்ளது. இவருக்கும், சித்தராமையாவுக்கும் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை. இருவரும் ஒற்றுமையாக பணியாற்றுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
