ADDED : ஜூலை 24, 2025 06:52 AM
பெங்களூரு : விலங்குகளை பரிமாற்றும் முறையில், பன்னரகட்டா உயிரியல் பூங்காவின் நான்கு யானைகள் ஜப்பானில் உள்ள பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இதுகுறித்து, பன்னரகட்டா பூங்கா வெளியிட்டுள்ள அறிக்கை:
பன்னரகட்டா உயிரியல் பூங்கா, ஜப்பானில் உள்ள ஹிமேஜி மத்திய பூங்காவோடு விலங்குகள் பரிமாற்றம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு புதுடில்லியில் உள்ள மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
பன்னரகட்டா பூங்காவில் இருந்து சுரேஷ், 8, கவுரி, 9, ஸ்ருதி, 7, துளசி, 5, ஆகிய நான்கு ஆசிய யானைகள் ஜப்பானின் ஹிமேஜி பூங்காவுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்த விலங்குகளுக்கு மாற்றாக, ஹிமேஜி பூங்காவிலிருந்து 4 ஜாகுவார், 4 சிறுத்தை, 4 பூமா, 3 சிம்பன்சி குரங்கு, 8 கருப்பு கப்புச்சின் குரங்குகள் பன்னரகட்டா பூங்காவுக்கு வர உள்ளன.
விலங்குகள், 20 மணி நேரம் விமான பயணத்தில் கொண்டு செல்லப்படும். அப்போது, கால்நடை மருத்துவர்கள், விலங்கு பராமரிப்பாளர்கள் உடனிருப்பர். விமானத்தில் பயணம் செய்வதற்காக, ஆறு மாதங்களாக விலங்குகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றன.
விலங்குகள் இன்றும், நாளையும் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட உள்ளன. விலங்குகளை பராமரிக்கவும், பாதுகாப்பாலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.