ADDED : மே 24, 2026 12:09 AM
ஹாவேரி: கர்நாடகாவின் பல்வேறு இடங்களில், நீரில் மூழ்கி தந்தை, மகன் உட்பட நால்வர் உயிரிழந்தனர்.
ஹாவேரி மாவட்டத்தின், ஆலதகட்டி கிராமத்தில் வசித்தவர் சம்புலிங்கப்பா, 40. இவரது மகன் சரத் ஹம்சபாவி, 8. இவர் மாற்றுத்திறனாளி. நேற்று காலையில் சம்புலிங்கப்பா, நடை பயிற்சிக்கு சென்றிருந்தார். அப்போது மகனையும் தன்னுடன் அழைத்து சென்றார்.
கிராமத்தின் மத்தியில் குளம் அருகில், இருவரும் நடந்து சென்றனர்.
அந்த குளத்தில் வழுக்கி சரத் ஹம்சபாவி, நீரில் விழுந்தார். மகனை காப்பாற்ற நீரில் இறங்கிய தந்தையும், நீரில் மூழ்கி உயிரிழந்தார். தந்தை, மகன் உடல்கள் மீட்கப்பட்டது.
சாம்ராஜ்நகர் மாவட்டத்தின், சந்தேமரளி அருகில் உள்ள தமரவாடி கிராமத்தை சேர்ந்தவர் மோகன்குமார், 21. மைசூரின் ஜெயபுரா அருகில் உள்ள கெளஹள்ளி கிராமத்தில் வசித்தவர் ரவிசந்திரா, 21. ஐ.டி.ஐ., முடித்துள்ள இவர்கள் மைசூரு நகரின், பெளகோலா தொழில் வளாகத்தில் உள்ள, கேன்ஸ் டெக்னாலஜி என்ற நிறுவனத்தில் பணியாற்றினர்.
நண்பர்களான இவர்கள், நேற்று முன் தினம் மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவின், பலமுறி என்ற இடத்திற்கு சுற்றுலா வந்திருந்தனர். காவிரி ஆற்றில் குளிக்க இறங்கிய அவர்கள், ஆழமான இடத்துக்கு சென்றதால், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
