அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி நான்கு லாரிகள், டிராக்டர் பறிமுதல்
அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி நான்கு லாரிகள், டிராக்டர் பறிமுதல்
ADDED : செப் 06, 2026 11:20 PM

ஜிகனி: பெங்களூரில், அரசுக்கு சொந்தமான கோ சாலை நிலம், ஏரிக்கரை நிலங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டிய நான்கு லாரிகள் மற்றும் டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பெங்களூரு ஜிகனி அருகில் உள்ள வடேரஹள்ளி கிராமத்தில், அரசுக்கு சொந்தமான, 2.14 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இங்கு சுரங்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், 150 அடி ஆழத்துக்கு பள்ளம் உள்ளது.
ஆனால், கடந்த சில நாட்களாக இந்த பள்ளத்தில் லாரிகள், டிராக்டர்கள் மூலம் கழிவுகள், கட்டட கழிவுகள் கொட்டப்படுவதை இக்கிராம மக்கள் பார்த்தனர்.
அத்துடன், கோ சாலைக்கு சொந்தமான நிலம் அருகில், ஏரி நிலத்தையும் பலர் ஆக்கிரமிக்க துவங்கி உள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு ஜிகனி துணை தாசில்தார் சைத்ரா, வருவாய் பொறுப்பு இன்ஸ்பெக்டர் லட்சுமிகாந்த் மற்றும் போலீசார் சென்றனர்.
அங்கு கழிவுகளை கொட்டப்படுவதை பார்த்த அதிகாரிகள், நான்கு டிப்பர் லாரிகள், ஒரு டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
அப்போது, ராஜேஷ் என்பவர், அதிகாரிகளை தடுத்து நிறுத்தி, பணி செய்ய விடாமல் தடுத்தார். இது தொடர்பாக பன்னரகட்டா போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
