ரசாயனத்தை சுவாசித்த நான்கு தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி
ரசாயனத்தை சுவாசித்த நான்கு தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி
ADDED : மார் 18, 2026 05:33 AM
ஹூப்பள்ளி: கட்டடம் ஒன்றில் மர வேலைகள் நடந்த போது, ரசாயனத்தை சுவாசித்த நான்கு தொழிலாளர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
ஹூப்பள்ளி மாவட்டம் தேஷ்பாண்டே நகரில் புதிதாக ஒரு கட்டடம் கட்டப்படுகிறது. இதில், மர வேலைகள் நடந்து வருகின்றன. பெங்களூரை சேர்ந்த ஜபர், அகமது, ஜபி, ஹைதர் ஆகியோர் அங்கேயே தங்கி வேலை செய்து வந்தனர்.
நேற்று முன் தினம் மர வேலைகள் நடந்த போது, ரசாயனம் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. இரவு பணி முடிந்த பின் சோர்வடைந்த நால்வரும், கதவு, ஜன்னல்களை சாத்திவிட்டு உறக்கத்தில் ஆழ்ந்தனர். ரசாயனத்தை சுவாசித்ததால், நான்கு தொழிலாளர்களும் சுய நினைவை இழந்தனர்.
காலை மற்ற தொழிலாளர்கள், பணிக்கு வந்த போது, நால்வரும் மயங்கி இருந்ததும், வாயில் நுரை வந்திருப்பதையும் கண்டனர். உடனடியாக நால்வரையும் ஹூப்பள்ளியின் கிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்தை, ஹூப்பள்ளி நகர் போலீசார் நேரில் பார்வையிட்டனர்.
